வேகமாக கார் ஓட்டிய யாஷிகா...பலியான தோழியின் பின்னணி...பரபரப்பை கிளப்பிய வீடியோ
சென்னை : பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான யாஷிகா ஆனந்த், சினிமாவில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடந்து வருகிறது.
Recommended Video
இந்நிலையில் ஜுலை 24 ம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் நடிகை யாஷிகா, நண்பர்கள் சிலருடன் சென்ற கார் விபத்திற்குள்ளானது. இதில் யாஷிகா மற்றும் இரண்டு நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். யாஷிகாவின் நெருங்கிய தோழியான பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

எலும்பு முறிந்த யாஷிகா
யாஷிகாவும், அவரது நண்பர்களும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாஷிகாவின் நண்பர்கள் இருவரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. யாஷிகாவிற்கு வலது கால், தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

யாஷிகா மீது வழக்கு
இந்நிலையில் யாஷிகா மீது காரை வேகமாக ஓட்டியது, அலட்சியதால் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாஷிகா மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பலியான தோழி யார்
உயிரிழந்த யாஷிகாவின் தோழியான 28 வயதாகும் வல்லிஷெட்டி பவானி, ஐதராபாத்தை சேர்ந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியரான இவர் ஒரு வாரத்திற்கு முன்பு தான் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர்களை சந்திக்க சென்னை வந்துள்ளார்.

பார்ட்டி கொண்டாடிய நண்பர்கள்
நீண்ட நாட்களுக்கு பின் ஒன்று சேர்ந்த நண்பர்கள், மாமல்லபுரத்தில் பார்ட்டி கொண்டாடி உள்ளனர். பார்ட்டி முடிந்து சென்னை திரும்பும் வழியில் ஈசிஆரில் சூளேரிக்காடு பகுதியில் இரவு 11.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. உயிரிழந்த பவானியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது.

பரபரப்பை கிளப்பிய வீடியோ
இதற்கிடையில் இரவு நேரத்தில் யாஷிகா வேகமாக கார் ஓட்டுவது போலவும், அதை அருகில் அமர்ந்திருப்பவர் வீடியோ எடுப்பது போலவும் அமைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.

வீடியோ எடுத்தது யார்
இந்த வீடியோ விபத்திற்கு முன், அவரது தோழி கடைசியாக எடுத்த வீடியோ என்றும் கூறப்படுகிறது. யாஷிகா குடிபோதையில் மிக வேகமாக காரை ஓட்டியதால் தான் இந்த கோர விபத்து நடைபெற்றதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

யாஷிகாவை விசாரிக்க திட்டம்
இருந்தாலும் உண்மையில் என்ன தான் நடந்தது, யாஷிகா தான் காரை ஓட்டினாரா, அந்த சமயத்தில் யாஷிகா போதையில் இருந்தாரா என்பது தொடர்பாக யாஷிகா மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications