நடிகர்கள்ல எவன்யா உண்மைய பேசுறான்?- பாரதிராஜா
சென்னை: இன்றைய நடிகர்களில் யாரும் உண்மையைப் பேசுவதில்லை. இவர்களில் விதிவிலக்காகத் திகழ்கிறார் விஷால், என்றார் இயக்குநர் பாரதிராஜா.
விஷால் தயாரித்து நடித்த பாண்டிய நாடு படத்தின் வெற்றிவிழா பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கிரீன் பார்க்கில் நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சி முடியும் நேரத்தில்தான் பாரதிராஜா வந்தார். தான் தாமதமாக வரக் காரணம் சென்னையின் மோசமான ட்ராபிக்தான் என்றவர், தாமதத்துக்கு மன்னிப்பையும் கேட்டுக் கொண்டார்.

நான் எதுக்கு இங்கே...
பின்னர் அவர் பேசுகையில், "இந்தப் படத்தோட பிரஸ்மீட்டுக்கு ஹீரோ, ஹீரோயின் டைரக்டர் வந்ததெல்லாம் சரிதான்.
ஆனால் என்னை எதுக்கு வரச் சொன்னாங்கன்னு தெரியல. நானும் 30 வருஷமா ஒரு டைரக்டரா பல பிரஸ் மீட்களைப் பார்த்துட்டேன். என்னை நடிகனாக்கிப் பார்க்கணும்னு டைரக்டர் சுசீந்திரன் ஆசைப்பட்டதால் அவன் கூப்பிட்டு இந்த பிரஸ்மீட்டுக்கு வந்தேன்.

நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணேன்
1964-ல் நடிக்கணும்ங்கிற ஆசையில தான் நான் சென்னைக்கு வந்தேன். அப்பெல்லாம் ஹீரோன்னை ரொம்ப அழகா, நல்லா மொழு மொழுன்னு 35 வயசைத் தாண்டியிருந்தாத்தான் ஒப்புக்குவாங்க (எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினியைச் சொல்கிறார்!).

நிவாஸ் நடிக்க வெச்சுட்டான்
அந்த மாதிரியான காலகட்டத்துல சின்னப்பையனா இந்த ஊருக்கு வந்தேன். பெரிய கனவுகளோட வந்தேன். ஆனா பிறகு இனி என்ன ஆனாலும் நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணினப்போதான், என்னோட நண்பன் நிவாஸ் எனக்கு விருப்பமில்லாமலேயே ஒரு டைரக்டரா ‘கல்லுக்குள் ஈரம்' படத்துல என்னை நடிக்க வெச்சுட்டான். படத்தோட வெற்றி விழாவிலயும் இதைச் சொன்னேன்.

விருப்பமில்லாம நடிச்சேன்
இப்படித்தான் நான் விருப்பமில்லாம ரெண்டு, மூணு படங்கள்ல நடிச்சேன்.
சுசீந்திரன் மேல எனக்கு எப்பவுமே சின்ன மரியாதை உண்டு. கமர்ஷியல் படமா இருந்தாலும் அவனோட படங்கள்ல ஒரு யதார்த்தம் இருக்கும். அவன் எனக்குப் போன் பண்ணி பார்க்கணும்னான். என்னடா.. ஏதாவது கேட்கப் போறானோன்னு நினைச்சேன்.

சுசீந்திரனுக்காக
ஆனா வந்தவன் நீங்க இந்தப் படத்துல நடிக்கணும்னு கேட்டான். முதல்ல மறுத்துட்டேன். அப்புறம் ரெண்டு மூணு நாள் யோசிச்சு, ஒரு நல்ல இயக்குநர்.. அவனோட மனசு கஷ்டப்படக்கூடாதுங்கறதுக்காக நடிக்க ஓ.கே சொன்னேன்.
இன்னைக்கு இந்த இடத்துல என்னை நிற்க வெச்சிருக்கான். அவனுக்கு என்னோட பாராட்டுகள்.

விஷால் நல்லவன்
ஹீரோ விஷால் இந்தப் படத்துல இருந்துதான் எனக்கு பழக்கமானார். ரொம்ப மென்மையான, நல்ல மனசுக்காரன். ஆவேசமா கத்தி, நரம்பு புடைக்க சண்டைப் போடுறது மாதிரியான எந்த விஷயத்தையும் பண்ணாம இந்தப் படத்துல ரொம்ப சிம்பிளா, யதார்த்தமா நடிச்சிருந்தார். அதைப் பார்த்து நான் பிரமிச்சுப் போயிட்டேன். ஒரு தயாரிப்பாளரா, அவன் நடந்துகிட்ட விதம் என்னை வியக்க வெச்சிடுச்சி. எதிலயுமே தலையிடல. இயக்குநர் கேட்டதையெல்லாம் செஞ்சான்... அவர் சொன்னபடியெல்லாம் தன்னை சுருக்கிக்கிட்டு நடிச்சான் பாருங்க... அதான் இந்த படத்தோட பிரமாண்ட வெற்றிக்குக் காரணம்.

எவன்யா உண்மை பேசுறான்?
இதையெல்லாம் விட அவன்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம்... அவன் ரொம்ப உண்மையா இருக்கிறதுதான். நான் 6 தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கேன்னு உண்மையை ஒளிக்காம பேசுறான். யாருக்கு இந்த கட்ஸ் வரும்... தமிழ் சினிமா ஹீரோக்கள்ல இன்னிக்கு எவன்யா உண்மைய பேசுறான்? தன்னைப் பற்றி ஒளிவு மறைவில்லாம உண்மையைப் பேசுற இந்தக் குணத்துக்காகவே விஷால் பெரிய ஆளா வரணும்... வருவான்," என்றார்.


Click it and Unblock the Notifications











