தொடரும் அதிர்ச்சி.. ஃபேனில் தூக்குப்போட்டு மேலும் ஒரு நடிகர் திடீர் தற்கொலை.. திரையுலகம் ஷாக்!
மும்பை: பிரபல டிவி நடிகர் ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிவி மற்றும் சினிமா நடிகர்கள் கடந்த சில மாதங்களாகத் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.
படப்பிடிப்பு இல்லாததால், பொருளாதாரச் சிக்கல் காரணமாக பலர் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி
கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் இல்லை என்பதால் பலர் பண நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பலருக்கு வாய்ப்புகள் இல்லாததால், தொடர்ந்து கடும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, வேறு வழியில்லாததால் அவர்கள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பதாக வருத்தத்துடன் பாலிவுட்டில் கூறுகின்றனர்.

நடிகர் சமீர் சர்மா
இந்நிலையில் பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் சமீர் சர்மா இன்று காலை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவர், கஹானி கர் கர் கி, கியூன்கி சாஸ் பி கபி பாகு தி, ஏ ரிஸ்தே ஹெய்ன் பியார் கே உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார். கரண் ஜோஹர் தயாரித்த ஹசி து பாசி என்ற படத்திலும் ஷாரூக் கான் தயாரித்திருந்த Ittefaq என்ற படத்திலும் துணை நடிகராக நடித்திருந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு
நடிப்பை தவிர மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த சமீர், மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். அவரது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டியே கிடந்துள்ளது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது சமீர் சர்மா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

2 நாட்களுக்கு முன்பே
அவர் உடலை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட சமீருக்கு வயது 44. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சமீர் கடந்த பிப்ரவரி மாதம்தான் வந்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து லாக்டவுன் பிறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங்
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து பாலிவுட் இன்னும் மீளவில்லை. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரை அடுத்து சின்னத்திரை நடிகர் மன்மீத் கிரேவல் தற்கொலை செய்தார். பிறகு பிரேக்ஷா மேத்தா என்பவரும் திடீரென தற்கொலை செய்தார். தொடர்ந்து சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











