'தினமும் டார்ச்சர் செய்கிறார்' அப்பா மீது 19 வயது சின்னத்திரை நடிகை பகீர் புகார்.. கண்ணீர் வீடியோ!
மும்பை: தனது தந்தை மீது சின்னத்திரை நடிகை கூறியுள்ள பகீர் புகார், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிகைகளை எடுத்து வருகின்றன.

சின்னத்திரை தொடர்
லாக்டவுன் காரணமாக, சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் வீடுகளில் உள்ளனர். சில மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் அதிகம் தொடங்கப்படவில்லை என்றாலும் சின்னத்திரை தொடர்களின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது.

திருப்தி ஷன்கதர்
இந்நிலையில், பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர், தனது தந்தை மீது பகீர் புகார் தெரிவித்துள்ளார். இந்தியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் குங்கும் பாக்யா. இதில் நடித்திருப்பவர் திருப்தி ஷன்கதர். இவர் உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர். மும்பையில் தங்கி இருந்து டிவி தொடரில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஓய் இடியட் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தினமும் டார்ச்சர்
இப்போது கொரோனா காலம் என்பதால் சொந்த ஊரில் இருக்கும் நடிகை திருப்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 19 வயதுதான் ஆகிறது. என்னை மும்பைக்கு அனுப்பி என்னை நடிகையாக்கியது என் தந்தை ராம் ரதன் ஷன்கதர்தான். நான் நடித்து ஒரே ஒரு படம்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

என்னைத் தாக்கினார்
இப்போது என்னை அவர் தினமும் டார்ச்சர் செய்து வருகிறார். 29 வயது இளைஞர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். அவர் பார்த்த இளைஞரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். மறுத்ததால் என்னைத் தாக்கினார். தலையை பிடித்து இழுத்து அடித்தார். கையில் காயத்தைப் பாருங்கள். என்னையும் என் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். என்னை அவர் கொன்றுவிடுவார்.

பயமாக இருக்கிறது
எங்களுக்கு பயமாக இருக்கிறது. நான் நடிகை ஆவதற்காக என் தந்தை கொடுத்த பணத்தையும் திருப்பி தந்துவிடும்படி கேட்கிறார். போலீசை தொடர்பு கொள்ளமுடியவில்லை. எங்களை காப்பாற்றுங்கள். இவ்வாறு வீடியோவில் கண்ணீருடன் கூறியுள்ளார். அந்த வீடியோவில் நடிகையின் அம்மாவும் இருக்கிறார். அவரையும் அவர் தந்தை பலமுறை தாக்கி உள்ளாராம். அவரும் வீடியோவில் இதை தெரிவித்துள்ளார்.
Recommended Video

பயப்பட வேண்டாம்
இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து சக நடிகைகள், அவருக்குப் பயப்பட வேண்டாம் ஒன்றும் ஆகாது என்று ஆறுதல் கூறியுள்ளனர். இதையடுத்து நடிகையின் மானேஜர் குல்தீப் கிஷோர் கூறும்போது, பரேலி போலீசார் இதுபற்றி நடிகையின் தந்தையிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் நடிகையும் அவர் அம்மாவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











