15 வயது சிறுமி கொலை வழக்கு.. மரண தண்டனை கைதி எஸ்கேப்.. கண்டுபிடிக்க உதவிய டிவி நிகழ்ச்சி!
திருவனந்தபுரம்: கேட்க ஏதோ ஒரு கிரைம் சினிமா கதை போலத்தான் இருக்கு. ஆனால், கேரளா சிறையில் இருந்து தப்பித்த மரண தண்டனை கைதி ஒருவர் சமீபத்தில் கர்நாடகாவில் சிக்கி உள்ளார். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியால் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். அப்படியொரு சம்பவம் ஒட்டுமொத்த கேரள போலீஸையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்துவிட்டு அவரது தங்க நகையை திருடிச் சென்ற ஒரு கொடூரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்கேப் ஆகி உள்ளான்.

15 வயது சிறுமி கொலை
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவரது தங்க நகைகளை திருடிச்சென்ற நிலையில் சிறுமி இறந்தே போனார். வட்டப்பாறை அருகே நடந்த இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சில வாரங்களில் அந்த கொடூரனை கைது செய்து போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி கேரள நீதிமன்றம் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற அந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்தது.

சிறையில் இருந்து எஸ்கேப்
இன்னொரு வழக்கிலும் அவருக்கு 25 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பூஜபூராவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்து திறந்தவெளி சிறைச்சாலைக்கு மற்ற கைதிகளுடன் அவர் மாற்றப்பட்ட நிலையில், சீனிவாசன் என்பவருடன் சேர்ந்து திட்டம் போட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

கேஸ் க்ளோஸ்
சீனிவாசனை சில வாரங்களில் காவல்துறையினர் தேடிப் பிடித்த நிலையில், ராஜேஷை அவர்களால் பிடிக்க முடியவில்லை. 2 சிறை அதிகாரிகளையும் இந்த பிரச்சனை காரணமாக சஸ்பெண்ட் செய்தனர். எங்கே தேடியும் ராஜேஷ் கிடைக்காத நிலையில், கிட்டத்தட்ட அந்த வழக்கு முடித்து வைக்கப்படும் நிலையில், இருந்த நிலையில், ஒரு டிவி நிகழ்ச்சி குற்றவாளியை சிக்க வைத்துள்ளது.

மாட்ட வைத்த டிவி ஷோ
மலையாள சேனலான மாத்ருபூமியில் மோஸ்ட் வான்டட் எனும் கிரைம் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான அந்த நிகழ்ச்சியில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் மாயமானது குறித்த செய்தி ஒளிபரப்பானது. அந்த செய்தியை பார்த்து ஷாக்கான நபர், இந்த ஆளை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என யோசித்து தனது காவல்துறை நண்பருக்கு தகவல் தெரிவிக்கவே அந்த குற்றவாளி தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

சிக்கிய குற்றவாளி
கர்நாடகாவில் உள்ள ஒரு ரப்பர் எஸ்டேட்டில் சூப்பர்வைஸராக விஜயன் எனும் பெயரில் வேலை செய்து வந்த நபர் தான் கேரளா சிறையில் இருந்து தப்பித்த ராஜேஷ் என்பதை போலீஸார் உறுதி செய்த நிலையில், அவனை கைது செய்து மீண்டும் கம்பி எண்ண வைத்துள்ளனர். தற்போது, சிறையில் இருந்து தப்பி ஓடிய வழக்கும் அவன் மீது பாய்ந்துள்ளது. காவல் துறைக்கு உதவிய அந்த நபருக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு டிவி ஷோ எந்த அளவுக்கு மிஸ்ஸான கைதியை பிடிக்க உதவி இருக்கு என கேரள போலீஸாரே வியந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











