மாணவர்களைப் பாராட்ட களமிறங்கிய தளபதி; இந்தவாட்டி என்னென்ன கூத்து இருக்கோ?
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் களமிறங்கினாலே நூற்றுக்கணக்கான கோடிகளில் வணிகம் செய்யும் விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதற்கு முன்னர் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டியது மட்டும் இல்லாமல், பாராட்டுச் சான்றிதழும் ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கிட்டத்தட்ட 1500 மாணவ மாணவியரை நேரில் அழைத்து அனைவருக்கும் அவரே தனது கைகளால் பாராட்டுச் சான்றிதழையும் உதவித் தொகையையும் வழங்கினார்.காலையில் இருந்து இரவு வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாள் முழுவதும் நின்று கொண்டு இருந்த விஜய் கால் வலியால் அவதிப்பட்டு மேடையிலேயே சோர்வுற்று நின்ற வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவியது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் விஜயைப் பார்த்து பரிதாபப்படவும் வைத்தது.

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், " தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் "தளபதி விஜய்". 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்" வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் "தமிழக வெற்றிக் கழகம்" சார்பாகப் பாராட்ட உள்ளார்.

முதற்கட்டம்
முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னயாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி. திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

இரண்டாம் கட்டம்
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி. ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர். திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

"தளபதி விஜய்", மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

என்னென்ன காத்திருக்கோ?
கடந்த முறை இதுபோன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதற்காக விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்தது. அதேநேரத்தில் ஊக்கத்தொகை வாங்கச் சென்ற மாணவர்கள் விஜயுடன் இணைந்து ரீல்ஸ் எடுப்பது, செல்ஃபி எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு நெட்டிசன்கள் தரப்பில் இருந்து தாறுமாறான விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த முறை விஜையை வைத்து என்ன மாதிரியெல்லாம் மாணவர்கள் கலாட்டா செய்யப்போகின்றார்களோ என்ற கேள்வியை வேதனையோடு கேட்கும் ரசிகர்களும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











