Vijay: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு.. விஜய் இரங்கல்!
சென்னை: தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் இன்று அதாவது டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால், மரணமடைந்தார். அவருக்கு வயது, 75. இவரது மறைவு, காங்கிரஸ் கட்சியினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தந்தை பெரியாரின் தம்பியான கிருஷ்ணசாமியின் பேரன். இவர் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்தவர். இதுமட்டும் இல்லாமல், கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, மத்திய ஜவுளித்துறை அமைச்சராக 2009ஆம் ஆண்டு வரை இருந்தார்.

கடந்த ஆண்டு அவரது மகன் திருமகன் ஈவெரா மறைவுக்குப் பின்னர், நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், போட்டியிட்டு, வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இப்படியான நிலையில், கடந்த நவம்பர் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதேநேரத்தில், கடந்த ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றமும் பின்னடைவும் மாறிமாறி வந்துகொண்டு இருந்தது.
மறைவு: இப்படியான நிலையில், இன்று அதாவது, டிசம்பர் 14ஆம் தேதி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. இந்நிலையில் அவரது மறைவுச் செய்தி கேட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் கொடி, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

விஜய் இரங்கல்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், "அதில்,மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த, திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். அதையடுத்து கடந்த ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவரும் இறந்துவிட்டதால், இந்தத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











