ஆளுநருடன் விஜய் சந்திப்பு.. ஜனநாயகன் தயாரிப்பாளரும் இருக்காரே.. தளபதி எப்போது முதலமைச்சராகிறார்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கட்சிகளின் ஆதரவை பெரும்பான்மைக்காக கேட்டது. காங்கிரஸ் முதலிலேயே ஆதரவை கொடுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் ஆதரவு கொடுத்திருக்கின்றன. இதன் காரணமாக தவெகவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டபோது; எப்படி தமிழ்நாடு அரசியல் பரபரத்திருந்ததோ அதேபோன்ற பரபரப்பை கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அரசியல் களம் கண்டது. தவெக மொத்தம் 108 தொகுதிகளில் வென்றிருந்தாலும்; பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் இல்லாததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் நிலைமை உருவானது. அதன்படி தவெகவினரும் செயல்பட தொடங்கினார்கள்.

முதல் ஆளாக காங்கிரஸ்: அப்போது திமுக கூட்டணியிலிருந்து கழன்றுகொண்டு முதல் ஆளாக சென்று தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. இருந்தாலும் காங்கிரஸிடம் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தாலும் தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்பட்டது. அதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கோ திமுக சரி என்று சொன்னால் நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் என்று கூறிவிட்டார்.
நீண்ட இழுத்தடிப்பு: விசிக, கம்யூனிஸ்ட்டுகளோ தங்கள் நிலைப்பாட்டினை அறிவிப்பதற்கு முன்பு பலமுறை யோசித்தார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார்கள். இருந்தாலும் ஆதரவு கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பம் தீரவில்லை. முக்கியமாக தவெக தரப்பிலிருந்து ஆதரவு கேட்டு விசிகவுக்கு வாட்ஸ் அப் மூலம் கடிதம் அனுப்பிய நிகழ்வெல்லாம் அரங்கேறியது. அதன் காரணமாகவே விசிக கண்டிப்பாக ஆதரவு கொடுக்காது என்று பலரும் பேசினார்கள். மேலும் இதன் பின்னணியில் திமுக இருப்பதாகவும் தவெகவினர் கூற; மு.க.ஸ்டாலினோ புதிய அரசு அமைவதற்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அனைவரது வாயையும் மூடிவிட்டார்.
ஆளுநருடன் சந்திப்பு: இறுதியாக விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் ஆதரவை கொடுத்திருக்கின்றன. விசிக, முஸ்லீம் லீக் வெளியே இருந்து ஆதரவு கொடுப்பதாகவும் அறிவித்திருக்கின்றன. இதனால் தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. எனவே இன்று மூன்றாவது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்தார் விஜய். அப்போது தவெக நிர்வாகிகள், ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனர் உடன் இருந்தார்கள். அநேகமாக நாளை காலை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பார் விஜய் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
ஜனநாயகன் தயாரிப்பாளர் ஏன்?: இன்றைய ஆளுநர் சந்திப்பின்போது ஜனநாயகன் தயாரிப்பாளரை ஏன் விஜய் உடன் அழைத்து செல்ல வேண்டும்; ஒருவேளை தாம் சி.எம் ஆகப்போவதால் இனிமேல் பட ரிலீஸுக்கு பிரச்னை இருக்காது. அந்த மகிழ்ச்சியோடுதான் ஜனநாயகன் தயாரிப்பாளரை தளபதி அழைத்து சென்றிருப்பார் என்று பலர் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். ஆகமொத்தம் பெரிய போராட்டத்துக்கு பிறகு நாளை விஜய், 'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என சொல்லப்போகிறார். அந்த தருணத்துக்காக அவரது ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
