TVK Vijay: மன்னுச்சுக்கோங்க.. முதல் முறையாக ரசிகர்களிடம்.. மன்னிப்பு கேட்ட தளபதி விஜய்!
சென்னை: நடிகர் விஜய் இனி வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது கட்சியின் பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டு, அதில் முதல் சனிக்கிழமையாக நேற்று அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இப்படி இருக்கையில் அவரது திட்டத்தின் படி நேற்று திருச்சி மற்றும் அரியலூரில் தான் பிரச்சாரம் செய்ய முடிந்தது. காரணம், திருச்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொடுத்த சாலை முழுவதுமான வரவேற்பால் திருச்சியிலேயே காலதாமதம் ஆகிவிட்டது. இப்படி இருக்கையில், பெரம்பலூரில் அவரால் தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்ற முடியவில்லை. இப்படி இருக்கும்போது, அவர் பெரம்பலூர் மாவட்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடமும் மக்களிடமும் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், " "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

வருத்தம்: இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்க கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முதல் முறையாக: அவரது இந்த பதிவு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. பெரம்பலூருக்கு விஜய் வருவார், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என்று காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்படி இருக்கையில் கட்சி தொடங்கி முதல் முறையாக தனது கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான பேச்சு இணையத்தில் உலா வருகிறது. அவரது எக்ஸ் தள பதிவு ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











