சிபிஐ விசாரணை ஓவர்.. அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஐந்தரை மணி நேரம் பதில் அளித்த விஜய்
டெல்லி: நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்த போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீதான இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணை இன்று அதாவது ஜனவரி 19ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த விசாரணை காலை 11.30 மணிக்கு தொடங்கி, மாலை 4.30 மணி வரை ஐந்து மணி நேரம் நீடித்த இந்த விசாரணையை அடுத்து, அவருக்கு அடுத்த கட்ட சம்மன் அனுப்பப்படுமா அல்லது இத்துடன் நிறைவடைந்ததா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் அவை குறித்த பேச்சுக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) இந்த வழக்கை விசாரிக்கிறது. கரூரில் முதலில் முகாமிட்ட சிபிஐ, தற்போது டெல்லியில் தொடர்புடையோரை வரவழைத்து விசாரித்து வருகிறது. இன்று விஜயிடம் விசாரணை நடைபெற்றபோதே, கரூரிலும் கள விசாரணையில் சிபிஐ ஈடுபட்டது. விஜயிடம் இதற்கு முன்னர் ஜனவரி 12 அன்று ஏழு மணி நேரத்திற்கும் மேலாகவும், இன்றைக்கு ஐந்து மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, இதுவரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அவரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கேள்விகள்: பிரசார வாகனத்தில் இருந்து அவர் பேசியபோது கூட்ட நெரிசலைக் கவனிக்கவில்லையா, நிகழ்ச்சியில் ஏழு மணி நேரம் தாமதம் ஏன், நெரிசலின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, வாகனம் ஏன் முன்னோக்கி நகர்த்தப்பட்டது போன்ற பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தாலும், சிலவற்றுக்கு பதிலளிக்க அவகாசம் கோரியுள்ளார் என்றும். அவரது பதில்களுக்கு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சிபிஐ அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்பத்திரிகை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அதில் விஜய்யின் பெயரையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது. விஜயின் ஜன நாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு வரும் 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











