மாட்டைப் போல் அடித்த காவல்துறை.. விசாரணையில் இறந்த அஜித்.. களத்தில் இறங்கிய தவெக விஜய்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்காக காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அஜித்குமார் உறவினர்கள் நடத்திய போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக பல திடுக்கிடும் உண்மைகளும் திருப்பங்களும் தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் நடிகரும் தவெக தலைவருமான விஜய். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலர் திருப்புவனத்தை சேர்ந்த அஜித்குமார், சந்தேகிக்கும் வகையில் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு தொடக்கத்தில் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட பதில்கள், அஜித்குமார் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார், அப்போது அவர் வழுக்கி விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் எனக் கூறப்பட்டது.
ஆனால் அவரது உடற்கூராய்வு முடிவில், அஜித்குமாரின் கண்கள் மற்றும் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது . அவரது உடலில் பல இடங்களில் உள்காயங்கள் உள்ளது எனவும், இரத்தக் குழாய்கள் சேதமடைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொது மக்களுக்கும், அஜித் குமாரின் உறவினர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இது மட்டுமல்லாமல் அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், காவலர்கள் 5 பேரை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.

சராமாரி கேள்விகள்: முதலமைச்சர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலையும், குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டாவும் வழங்க உத்தரவிட்டார். இது மட்டும் இல்லாமல், வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழ்நாடு அரசை நோக்கி சரமாரியாக கேள்விகளை முன் வைத்தது.
அஜித் வீட்டில் விஜய்: அஜித் குமார் மரணம் தொடர்பாக எதிர்கட்சியான அதிமுக தொடங்கி, பல எதிர்கட்சிகள், திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் காவல்துறையையும் தமிழ்நாடு அரசையும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் விசாரணையின் போது மரணமடைந்த அஜித்குமாரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் அஜித் குமாரின் தாயார், சகோதரர் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
2026 தேர்தல்: விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து, திமுக அரசின் நிர்வாகத் தோல்வி என சுட்டிக் காட்டப்படும் சம்பவங்களில் நேரடியாக களத்தில் இறங்கி விடுகிறார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். அதேபோல், அஜித் குமார் விஷயத்தில் காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைச்சராக இருப்பவர் முதலமைச்சர். அதிமுக ஆட்சி முடியும் போது அவர்களின் ஆட்சியில் கரும்புள்ளியாக மாறியது சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் லாக்கப் மரணம் தான். இந்நிலையில் நடிகர் விஜய் இந்த விஷயத்தை மிகப்பெரிய பிரச்னையாக மாற்றக்கூடும் எனவும் பேசி வருகிறார்கள். குறிப்பாக தேர்தல் வருகையில் இந்த விஷயம் தொடர்பாக காட்டமான விமர்சனங்களை முன் வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











