விதிகளை மீறி கருத்து.. நடிகை கங்கனாவின் சர்ச்சைப் பதிவுகள் நீக்கம்.. ட்விட்டர் நடவடிக்கை!
மும்பை: புதிய வேளாண் சட்டம் தொடர்பாக நடிகை கங்கனா வெளியிட்டிருந்த சில பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் திடீரென நீக்கியுள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அவர்களுக்கு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருந்தும் சுமூகமான முடிவு எடுக்கப்படவில்லை.

டிராக்டர் பேரணி
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது நடந்த வன்முறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே விவசாயிகள் 6 தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நாளை நடத்த இருக்கின்றனர்.

ஆதரவு தெரிவித்து
அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாப் பாடகி ரிஹானா
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த போராட்டத்தை பற்றிய செய்தி லிங்க்கை பகிர்ந்து 'ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?'என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு பெரும் வைரலானது.

விற்பவர்கள் அல்ல
உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. இதற்கு நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டரில் பதில் அளித்திருந்தார். அதில், 'அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனென்றால், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள். அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

ட்விட்டர் நிறுவனம்
கங்கனாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய வேளாண் சட்டம் தொடர்பாக, நடிகை கங்கனா வெளியிட்டிருந்த சில பதிவுகளை, ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. கங்கனா ரனாவத் விதிகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











