கொரோனா வாரியர்ஸ்.. சோனுசூட், அக்ஷய்குமாருக்கு பாரத ரத்னா விருது.. ரசிகர்கள் திடீர் கோரிக்கை!
சென்னை: கொரோனாவில் மக்களுக்கு உதவியதற்காக நடிகர்கள் சோனு சூட், அக்ஷய்குமார் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக, மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் இறுதியில் திடீரென லாக்டவுனை பிறப்பித்தன.
யாரும் எதிர்பார்க்காத இந்த ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நிலைகுலைந்தனர். பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டனர்.

தொழிலாளர்கள்
ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த செலவில் தொடர்ந்து உதவி செய்து வந்தார். விமானம் மூலமாகவும் தனி பேருந்துகளை ஏற்பாடு செய்தும் அவர்களை அனுப்பி வைத்தார்.

புகழ்ந்து தள்ளினர்
கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை ஏற்கனவே கொடுத்திருந்தார் அவர். தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவும் கொடுத்து வந்தார். இதையடுத்து, நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர்.

நடிகர் அக்ஷய்குமார்
அவர் வில்லன் அல்ல, நிஜ ஹீரோ என்றும் அவரது மனதுக்கு நல்லதே நடக்கும் என்றும் அவர்கள் கூறினர். சோனு சூட்டின், உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டனர். மறுக்காமல் முடிந்த உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 கோடியை அளித்தார் நடிகர் அக்ஷய் குமார். இவ்வளவு கோடி ரூபாயை யாரும் நிவாரணமாக அளித்ததில்லை.

பாரத ரத்னா விருது
அதோடு இதற்கு முன்னும் அவர் தாராளமாக நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். இதைச் சுட்டிக் காட்டும் ரசிகர்கள், இவர்கள் இருவருக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இருவருமே தங்களது இதயத்தின் அடியாழத்தில் இருந்து இந்த உதவிகளை செய்துள்ளனர். அவர்கள் அந்த விருதுக்கு தகுதியானவர்கள்தான் என்று பலர் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











