ஜெர்மனி பெண் அளித்த புகார்... ஆர்யா வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்... 2 பேர் அதிரடி கைது!
சென்னை: நடிகர் ஆர்யா 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் அளித்த புகாரில் திடீர் திருப்பமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் வசிப்பவர் இலங்கையை சேர்ந்த இளம் பெண் விட்ஜா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆர்யா மீது மோசடி வழக்கு
இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதாவது கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி'க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சாயிஷாவை விவாகரத்து செய்வதாக வாக்குறுதி
அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். மேலும் பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாக கூறினார். மேலும் 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா, கடந்த 10 ஆம் தேதி இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.
Recommended Video

அந்த பெண் யார் என்று தெரியாது
அவரிடம் இளம் பெண் அளித்த மோசடி புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரத் தயார் என்றும், முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் நடிகர் ஆர்யா உறுதியளித்திருந்தார். மேலும் தன் மீது புகார் அளித்த பெண் தனக்கு யார் என்று தெரியாது என்றும் அந்த பெண் யாரிடம் ஏமாந்தார் என்பதை காவல்துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் ஆர்யா.

ஜெர்மனி பெண்ணுக்கும் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை
அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை என்பதும் தெரியவந்தது.

நடிகர் ஆர்யா போல் நடித்து
இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் போலி வலைதளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. பணப்பறிப்பில் ஈடுபட்ட வலைதள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ஆர்யா போல் மோசடி - பரபரப்பு
அவர்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் என தெரிய வந்துள்ளது. இருவரும் சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் ஆர்யா போல் நடித்து வெளிநாட்டு இளம் பெண்ணிடம் 2 பேர் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019ல் திருமணம் - பெண் குழந்தை
நடிகர் ஆர்யா 2018 ஆம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்தார். அப்போது அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சாயிஷாவுடன் ஆர்யாவுக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











