Rohini theatre issue : ரோகிணி திரையரங்க விவகாரம்.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு!
சென்னை : நேற்றைய தினம் நடிகர் சிம்பு, கவுதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் பத்து தல படம் வெளியானது.
இந்தப் படம் ரோகிணி திரையரங்கத்திலும் ரிலீசான நிலையில், நரிக்குறவர் சமூகத்தினருக்கு திரையரங்கிற்குள் சென்று படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.

பத்து தல படம்
நடிகர் சிம்பு, கவுதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றைய தினம் சர்வதேச அளவில் பத்து தல படம் ரிலீசாகியுள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்புவின் இந்தப் படம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி நேற்றைய தினம் ரிலீசாகியுள்ள நிலையில், படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுந்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே பல கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது.

இடைவேளையில் என்ட்ரி கொடுத்த சிம்பு
படத்தின் இடைவேளையில்தான் நடிகர் சிம்புவின் என்ட்ரி காணப்பட்டது. இருந்தபோதிலும் கேங்ஸ்டராக, மணல் கொள்ளையில் ஈடுபடும் சிம்புவின் நடிப்பு இந்தப் படத்தில் அதிகமாக மெச்சப்பட்டுள்ளது. படத்தில் கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் சிறப்பாக காணப்பட்டது. ஆனாலும் ஒரே மாதிரியான லுக்கில் அதிகமான காட்சிகளில் அவர் தோன்றுவதாகவும் அது சலிப்பை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கௌதம் கார்த்திக் -பிரியா பவானி சங்கர் ஆகியோரின் மென்மையான காதல் மற்றும் பிரேக் அப்பும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது.

தங்கை சென்டிமெண்ட்
சிம்புவிற்கு படத்தில் ஜோடியில்லை என்றபோதிலும் தங்கை மற்றும் அவரது மகளுடனான சென்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது. படத்தில் சில பல லாஜிக் மீறல்கள் இருந்தபோதிலும் படத்தை சிறப்பாக தன்னுடைய தோள்களில் தாங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் சிம்பு. அவரது நடிப்பில் நாளுக்கு நாள் பலம் சேர்ந்து வருகிறது. மேலும் படத்தில் அதிக நேரம் வரும் கௌதம் கார்த்திக்கும் படத்திற்கு சிறப்பை சேர்த்துள்ளார்.

நரிக்குறவ சமூகத்தினருக்கு அனுமதி மறுப்பு
இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்றைய தினம் ரிலீசான நிலையில், ரோகிணி திரையரங்கில் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளுடன் படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு திரையரங்கிற்குள் சென்று படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. திரையரங்கின் டிக்கெட் பரிசோதகர்கள், அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்
இந்த விவகாரத்தில் முதல்முறையாக குரல் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். கலை என்பது அனைவருக்கும் பொதுவானது என்று தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு செய்துள்ளனர். அவர்களின் உடைதான் பிரச்சினையா என்று பிரியா பவானி சங்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஊழியர்கள்மீது வழக்குப்பதிவு
இதனிடையே ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தினரை படம் பார்க்க அனுமதி மறுத்த டிக்கெட் பரிசோதகர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார். முன்னதாக இந்த விவகாரத்தில் திரையரங்கம் சார்பில் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











