அடுத்த படம் ஏ-வா, யு-வா... சாய்ஸை ரசிகர்கள் கையிலேயே தந்துவிட்ட ‘கஜினிகாந்த்’ இயக்குநர் சந்தோஷ்!
கஜினிகாந்த் பட வெற்றியைப் பொறுத்தே தனது அடுத்தபடம் குறித்து முடிவு செய்வேன் என்கிறார் இயக்குநர் சந்தோஷ்.
சென்னை: கஜினிகாந்த் படத்திற்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து தான் தனது அடுத்தபடம் குறித்து முடிவு செய்வேன் என கஜினிகாந்த் பட இயக்குநர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
கௌதம் கார்த்திக்கை வைத்து 'ஹரஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இந்த இரண்டு படங்களும் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றதால், அவருக்கு பலான பட இயக்குநர் என்ற முத்திரை கிடைத்தது.
ஆனால், மேற்கூறிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

ஆர்யா படம்:
இந்நிலையில், சந்தோஷ் ஆர்யாவை நாயகனாக்கி கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தவாரம் ரிலீசாக இருக்கிறது. ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் சாயிஷா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடித்துள்ளனர்.

3வது படம்:
பாலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். முதல் இரண்டு படங்களுக்கு ஏ சான்றிதழ் கிடைத்த நிலையில், மூன்றாவது திரைப்படமான கஜினிகாந்திற்கு மத்திய தணிக்கை வாரியக்குழு உறுப்பினர்கள், ‘யு' சான்றிதழ் அளித்தனர்.

ஒரே நேரத்தில்:
இந்நிலையில் இன்று கஜினிகாந்த் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் சந்தோஷ், "இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இயக்கிய போதே, கஜினிகாந்த் பட வேலைகளையும் ஆரம்பித்து விட்டோம். காலையில் ஒரு பட ஷூட்டிங், மாலையில் மற்றொன்று என திட்டமிட்டு படவேலைகளை முடித்தோம். என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

குடும்பப் படம்:
ஏ படம் எடுப்பதும், எடுக்காததும் என் இஷ்டம். அடுத்தடுத்து அடல்ஸ் ஒன்லி படங்கள் கொடுத்ததால், ஏன் இப்படி படம் எடுக்கிறீர்கள் என என்னைப் பார்த்துக் கேட்டனர். அதனால் இம்முறை அந்த பார்முலாவில் இருந்து மாறுபட்டு குடும்பப்பாங்கான படமாக கஜினிகாந்தை உருவாக்கி இருக்கிறேன்.

மக்கள் கையில்:
இப்படத்திற்கு மக்களிடம் எப்படி ஆதரவு கிடைக்கிறது என்று பார்க்கலாம். அதிக ஆதரவு கிடைத்தால் இனி குடும்பங்களாக அமர்ந்து பார்க்கும் வகையில் இதே போன்ற படங்கள் கொடுப்பேன். கஜினிகாந்திற்கு உங்கள் ஆதரவு இல்லையென்றால், அடுத்து இஅமுகு போன்ற படங்களை இயக்க ஆரம்பித்து விடுவேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











