Udhayam theatre: சென்னையின் அடையாளம்.. முன்னணி நடிகர்களின் கோட்டை.. மூடப்படும் உதயம் தியேட்டர்!
சென்னை: சென்னையின் அடையாளங்கள் பலவற்றை நாம் இழந்து வருகிறோம். அந்தவகையில் கடந்த 1983ம் ஆண்டில் உருவான உதயம் திரையரங்கத்திற்கு தற்போது மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. பல வெற்றிப்பட இயக்குநர்களின் முன்னணி ஹீரோக்களின் வெற்றிகளுக்கு மௌன சாட்சியாக இருந்த உதயம் திரையரங்கம் அந்த காலத்திலேயே மல்ட்டி பிளக்ஸ் திரையரங்காக இருந்தது. ஒரே இடத்தில் உதயம், மினி உதயம், சந்திரன் மற்றும் சூரியன் என 4 திரைகளில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசாகி ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை இந்த திரையரங்கு கொடுத்து வந்தது. 62,400 சதுர அடியுடன் 1.3 ஏக்கருடன் பரபரப்பான இடத்தில் அமைந்திருந்த இந்த திரையரங்கம் தற்போது மூடப்பட்டுள்ளது.
ஏராளமான நண்பர்களின், காதலர்களின், குடும்பங்களின் திரை அனுபவத்திற்கு இந்த திரையரங்கம் சாட்சியாக இருந்தது. வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், மாம்பலம் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த ரசிகர்களுக்கு சிறப்பான தியேட்டர் அனுபவத்தை கொடுத்துவந்த இந்த திரையரங்கு, 41 ஆண்டுகள், செயல்பட்டு தற்போது மூடுவிழா கண்டுள்ளது. உதயம் தியேட்டர்ல என் இதயத்தை தொலைத்தேன் என்று பாடலையும் கண்ட உதயம் தியேட்டர் மூடப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்துவும் தன்னுடைய வருத்தத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

சென்னையின் அடையாளங்கள்: ஒரு காலகட்டத்தில் பல அழகியல் அம்சங்களுடன் கவர்ச்சியுடன் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவந்தது சென்னை. பல அழகான விஷயங்கள் சென்னையின் அடையாளங்களாக இருந்த நிலையில், வேலைவாய்ப்புகளும் பெருகிக் காணப்பட்டது. சென்னையின் கவர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளில் கவரப்பட்டு சென்னைக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் ரயில் ஏறியவர்கள் பலர். அவர்களின் அந்தக் கனவை நனவாக்கிய பெருமை சென்னைக்கு உண்டு. அதுபோன்ற பல வெற்றிக்கதைகளை நாம் கேட்டிருக்கலாம். ஆனால் மக்கள் தொகை அதிகமாக காணப்படும் சென்னை தன்னுடைய அதிகமான அடையாளங்களை தற்போது இழந்து வருகிறது.
மூடப்படும் திரையரங்குகள்: அந்த வகையில் சென்னையின் அடையாளங்களாக இருந்த பல திரையரங்குகள் தற்போது அடுத்தடுத்து மூடப்பட்டு, திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என உருமாறி வருகின்றன. இந்த வரிசையில் நாகேஷ் தியேட்டர், காமதேனு தியேட்டர். அகஸ்தியா தியேட்டர், ஆல்பர்ட் தியேட்டர், அபிராமி தியேட்டர் என அடுத்தடுத்த திரையரங்குகள் மூடுவிழா கண்டுள்ளன. அந்த பட்டியலில் தற்போது சென்னையின் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள உதயம் திரையரங்கும் சேர்ந்துள்ளது.
மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கம்: மாற்றம் ஒன்றுதான் மாறாதது இந்த வார்த்தைகளுக்கு தற்போது சாட்சியாய் மாறியுள்ளது இந்த திரையரங்கம். கடந்த 1983ம் ஆண்டிலேயே மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கமாக கட்டப்பட்ட உதயம் தியேட்டர் அசோக்நகர், சைதாப்பேட்டை, மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர மக்களின் சிறப்பான திரையரங்க அனுபவத்திற்கு கைக்கொடுத்தது. எந்தவொரு கொண்டாட்டத்தையும் திரையில் சென்று கழிக்கலாம் என்ற நினைப்பை ரசிகர்களிடையே அதிகமாக விதைத்தது உதயம் தியேட்டர். உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தி வந்த இந்த திரையரங்கு ஏழைகளின் சிம்மாசனமாக இருந்தது.
முன்னணி நடிகர்களின் படங்கள்: நான்கு நண்பர்கள் ஒன்றுகூடினால் என்ன செய்ய முற்படுவார்கள், அவர்களுக்கு வடிகாலாக இருப்பது திரைப்படங்களே. அந்த வகையில் உதயம் தியேட்டருக்கு சென்றுவிட்டால் டிக்கெட் கிடைக்காது என்ற பிரச்சினையே இல்லாமல் 4 திரையரங்குகளில் ஒன்றிலாவது நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம். புக்கிங் கலாச்சாரம் தற்போது பெருகிவிட்டது. ஆனால் கமல், ரஜினி என முன்னணி நாயகர்களின் படங்களுக்கும் சென்று சிறப்பான திரையரங்க அனுபவத்தை இந்த தியேட்டரில் பெற முடிந்தது. தற்போதுள்ள மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திண்பண்டங்களை வாங்குவதற்கு டிக்கெட்டுகளை காட்டிலும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.
ஏழை மக்களின் சொர்க்கம்: ஆனால் அதுபோன்ற எந்த அங்கலாய்ப்பும் இல்லாமல், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஒன்று கலந்திருந்தது உதயம் தியேட்டர். தற்போது அந்த திரையரங்கம் மூடப்படுவது அனைத்து தரப்பு மக்களிடையேயும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கொண்டாட்டங்களின் சாட்சியாக தொடர்ந்து இருந்து வந்த உதயம் திரையரங்கம், நாளையே வேறு வடிவத்தில் உருமாறலாம். ஆனால் அந்த இடத்தை கடக்க முயலும் ரசிகர்கள் ஒரு முறையாவது உதயம் தியேட்டரை நினைக்காமல் நகர முடியாது. உதயம் தியேட்டர்ல என்று பாடல் பெற்ற இந்த அடையாளத்தையும் நாம் துறக்கத்தான் வேண்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











