இன்னும் கதையே ரெடியாகல… கமல் - மணிரத்னம் படம் Take Off ஆகுமா? உதயநிதி கொடுத்த அப்டேட்
சென்னை: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள அவரது 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார்.
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து உதயநிதி முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் 234
விக்ரம் திரைப்படம் மூலம் மாஸ்ஸாக கம்பேக் கொடுத்துள்ள கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் படம் இயக்க வேண்டும் என பா ரஞ்சித், லிங்குசாமி ஆகியோர் கதையுடன் காத்திருந்தனர். ஆனால், யாரும் எதிபார்க்காத விதமாக கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

நாயகன் மீண்டும் வரான்
கமல் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியான இந்த அறிவிப்பின் படி, கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளன. 1987ல் வெளியான நாயகன் திரைப்படம் இந்திய சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதியின் அப்டேட்
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளார். நாயகன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், தற்போது 'கமல் 234'ல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் பிரம்மாண்டமான கூட்டணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. கமல் - மணிரத்னம் இணையும் இந்தப் படத்தின் கதை குறித்து பலவிதமான யூகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி கமல் 234 கதை குறித்து சமீபத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

கதை தெரியுமா?
உதயநிதி நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ள உதயநிதி, 'கமல் 234' படத்திற்கான கதை இன்னும் ரெடியாகவில்லை என அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். ஆனால், மொத்தம் மூன்று கதைகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் எதாவது ஒரு கதையை முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் கதையே முடிவாகாமல் கமல் 234 அறிவிப்பு வெளியாகியுள்ளதால், படம் சொன்னபடி உருவாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











