‘’வாரிசு’’ விவகாரத்தில் நான் தலையிட முடியாது..நைசாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்!
சென்னை : வாரிசு பட விவகாரத்தில் நான் தலையிட முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் நைசாக நழுவினார்.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும் இப்படத்திற்கு தெலுங்கில் வரசுடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மேலும், இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.

வாரிசு வெளியாவதில் சிக்கல்
இதையடுத்து, தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், பொங்கலுக்கு தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளிக்க, திரையரங்க உரிமையாளர்களிடம் கூறியுள்ளது. 2017ம் ஆண்டு தில் ராஜூ, பிலிம் சேம்பர் துணைத் தலைவராக இருந்தபோது, தீபாவளி மற்றும் பொங்கலுக்கு தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தில் ராஜுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலும் எதிர்ப்பு
இதனால் வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். நாளுக்கு நாள் பூதாகரமாக வரும் இந்த விவாகரத்தில், தமிழகத்திலும் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு, சீமான் ஆகியோர் தெலுங்கு தயாரிப்பாளர்களை வன்மையாக கண்டித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உதயநிதி, கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். நீர் பறவை படத்திலிருந்து தொடங்கிய நட்பு கட்டா குஸ்தி வரை வளர்ந்துள்ளது. இந்த படத்தையும் ரெட் ஜெயிண்ட் தான் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இந்த படத்தை நான் ரிலீஸ் செய்கிறேன். கட்டா குஸ்தி திரைப்படம் டிசம்பர் 2 ந் தேதி வெளியாக உள்ளது என்றார்.

நைசாக நழுவினார்
இதையடுத்து, செய்தியாளர் ஒருவர் வாரிசு திரைப்பட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்த உதயநிதி தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் நான் எப்படி பேச முடியும் என கூறிவிட்டு, இதில் தான் தலையிட முடியாது என நைசாக அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். பெங்கலுக்கு வெளியாக உள்ள அஜித்தின் துணிவு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











