எனக்கு ஒரு அண்ணன் மாதிரி இருந்தாரு.. மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று இரவு முழுவதும் சிவராத்திரி விழாவில் பாட்டு பாடி இறை வழிபாடு நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, வடபழனியில் உள்ள மயில்சாமியின் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மயில்சாமியின் திரு உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மயில்சாமி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
மரணம் என்பது யாருக்கு எப்போ வரும் என்பது யாருக்குமே தெரியாது. நகைச்சுவை நடிகராக சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த மயில்சாமி இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை, வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சித்தார்த் இரங்கல்
நடிகர் சித்தார்த் மயில்சாமி உயிரிழந்த செய்தியை அறிந்ததும் நேரில் சென்று மாலை அணிவித்து மயில்சாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். எப்போதுமே பாசிட்டிவ் ஆக பேசக்கூடிய மனிதர், அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மறைவார் என நினைக்கவில்லை என நடிகர் சித்தார்த் அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
நடிகர், தயாரிப்பாளர், விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் மயில்சாமியின் மறைவை அறிந்து மிகவும் வேதனைப்பட்ட நிலையில், நேரில் சென்று அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அண்ணன் மாதிரி
மயில்சாமி எனக்கு ஒரு அண்ணன் மாதிரியே இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடனே பேசுவார். அவரது மறைவு செய்தி அறிந்ததுமே ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக பேரிழப்பு தான் என்று உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

40 நாட்களுடன் என்னுடனே டிராவல் பண்ணார்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக மயில்சாமி நடித்திருப்பார். மொத்தம் 50 நாட்கள் அந்த படம் எடுக்கப்பட்டது. அதில், 40 நாட்கள் என்னுடனே அவர் டிராவல் செய்தார். அவருடைய நல்ல மனசை பலரும் பாராட்டி உள்ளனர் என நெஞ்சுக்கு நீதி படத்தில் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ரசிகர்கள் கண்ணீர்
பல கோடி ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் சிரிக்க வைத்து வந்த மயில்சாமி ஏகப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற பண உதவிகளையும் செய்துள்ளார். மயில்சாமியின் வீட்டுக்கு அருகே உள்ள பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் கண்ணீர் மல்க மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என தொடர்ந்து மயில்சாமியின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











