கர்ணனில் செய்யப்பட்ட மாற்றம்.. எழும் அதிருப்தி குரல்கள்.. உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டிவிட்!
சென்னை: கர்ணன் படம் குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டிவிட்டியுள்ளார்.
Recommended Video
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் கர்ணன். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இசை, பாடல்கள், கதாபாத்திரங்களின் நடிப்பு என அனைத்தும் பாராட்டை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசிலும் கர்ணன் திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது.

தொடரும் சர்ச்சை
அதேநேரத்தில் படம் குறித்த சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. கொடியன்குளம் வன்முறையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், எந்த ஆண்டு இந்த வன்முறை அரங்கேறியது என்பது குறித்து தொடர்ந்து அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சை எழுந்து வருகிறது.

கொண்டாடப்பட வேண்டியது
கர்ணன் படம் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒரு டிவிட்டை பதிவு செய்திருந்தார். அதாவது, 'கர்ணன்' பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது.

கழக ஆட்சியில் நடந்ததாக
நண்பர் தனுஷ் அண்ணன் தானு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது.

படத்தில் மாற்றம்
இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்' என உறுதியளித்தனர். நன்றி என பதிவிட்டிருந்தார். உதயநிதி ஸ்டாலின் டிவிட்டை தொடர்ந்து படக்குழு படத்தில் வருடம் குறித்து வெளியிடப்படும் பகுதியை 90களின் பிற்பகுதி என்று மாற்றியுள்ளது.
மீண்டும் டிவிட்
இதற்கும் ஆங்காங்கே எதிர்ப்பு குரல்கள் வந்த நிலையில் உதயநிதி, கர்ணன் திரைப்படம் தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது, கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.
90கன் இறுதியில்..
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.
இதோடு விடுங்கள்
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


Click it and Unblock the Notifications











