மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை ஒருசிலர் முடிவு செய்வதா?... சென்சாரைத் தாக்கும் ராஜமௌலி!
ஹைதராபாத்: ஒட்டுமொத்த நாட்டு மக்களும் என்ன பார்க்க வேண்டும் என்ன பார்க்கக் கூடாது என்பதை, ஒருசிலர் முடிவு செய்கின்றனர் என ராஜமௌலி கூறியிருக்கிறார்.
உத்தா பஞ்சாப் பட விவகாரத்தில் சென்சாருக்கு எதிராக பாலிவுட் உலகம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இந்நிலையில் உத்தா பஞ்சாப் படத்திற்கு ஆமிர்கான், ராஜமௌலி, கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

உத்தா பஞ்சாப்
அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘உத்தா பஞ்சாப்'. ஆலியா பட், கரீனா கபூர் நாயகிகளாக நடித்துள்ள இந்தப் படம், போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 17 ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. தொடர்ந்து தணிக்கைக் குழுவுக்கு இப்படத்தை அனுப்பி வைத்தனர்.

பஞ்சாப்
தணிக்கைக் குழுவில் இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தின் பெயரிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்குமாறு கூறினர். மேலும் 13 இடங்களில் இப்படத்தின் காட்சியை மாற்றுமாறு பரிந்துரை செய்தனர். இதனால் படத்தின் தணிக்கை விவகாரத்தில் படக்குழு மற்றும் தணிக்கைக்குழு இருவருக்குமிடையே மோதல் உருவானது. இந்த விவகாரத்தில் உத்தா பஞ்சாப் படக்குழுவுக்கு ஆதரவாக, ஒட்டுமொத்த பாலிவுட் உலகமும் திரண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஆமிர்கான்
தற்போது உத்தா பஞ்சாப் பட விவகாரத்தில் ஆமிர்கான், ராஜமௌலி, கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆமிர்கான் ''இது போன்ற செயல்கள் தணிக்கைக் குழு மீது மோசமான அபிப்பிராயத்தை உண்டாக்குகிறது. உத்தா பஞ்சாப் ஒரு நல்ல சமுதாயக் கருத்துள்ள படம். பஞ்சாப் இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கும் போதை பழக்க வழக்கங்களைத் தான் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. எல்லா இடத்திலும் படைப்பாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

ராஜமௌலி
''ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் என்ன பார்க்க வேண்டும் என்ன பார்க்கக் கூடாது என்பதை ஒருசிலர் முடிவு செய்கின்றனர். நான் ஒரு குடும்பத் தலைவர் என்றால் என் மனைவி, குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று பாகுபலி புகழ் ராஜமௌலி கூறியிருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா
ஜனநாயக நாட்டில் ஒரு படைப்பை தடுத்து நிறுத்தக் கூடாது என பிரியங்கா சோப்ராவும், உத்தா பஞ்சாப் படக்குழுவை தான் ஆதரிப்பதாக நடிகை கங்கனா ரனாவத்தும் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றம்
உத்தா பஞ்சாப் பட விவகாரத்தில் தணிக்கைக் குழுவை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தணிக்கைக் குழு அதிகாரிகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வருகின்ற திங்கட்கிழமைக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











