உடல்நலக்குறைவு.. சிகிச்சை பெற்றுவந்த சினிமா இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
சென்னை: இயக்குனர் ஒருவர் திடீரென மரணம் அடைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
Recommended Video
உடுக்கை என்ற படத்தை இயக்கி வந்தவர், பாலா என்ற எம்.ஆர்.பாலமித்ரன். இவர் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், கள்வர்கள் ஆகிய இரண்டு படங்களை ஏற்கனவே இவர், இயக்கி முடித்துள்ளார்.

ஷூட்டிங் பாக்கி
இந்தப் படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் மூன்றாவது படமான உடுக்கை என்ற படத்தை இயக்கி வந்தார். இதை ஆர்.சரவணன், உமர், சோழாஸ் சிவா ஆகியோர் தயாரித்தனர். நடிகை ரேனிகுண்டா சஞ்சனா சிங் உட்பட சிலர் நடித்துள்ளனர். இதன் 95 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்னும் 5 நாட்களே ஷூட்டிங் பாக்கி இருந்தது.

உடல்நலக் குறைவு
லாக்டவுனுக்கு பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருந்தது. அதற்கான பணிகளில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று பாலமித்ரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தனியார் மருத்துவமனை
பின்னர் இயக்குனர் சங்கம் மூலமாக, காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 39. பின்னர் அவரது சொந்த ஊரான, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

நடிகை சஞ்சனா
அங்கு அவரது இறுதிச்சடங்கு நடந்தது. மறைந்த பாலமித்ரனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளம் இயக்குனர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் 'உடுக்கை' படத்தில் நடித்துவரும் சஞ்சனா சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பாலமித்ரனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிர்ந்து போனேன்
அதில், நான் நடித்துள்ள உடுக்கை பட இயக்குனரின் மரண செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். இனிமையான மனிதர். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து திரையுலகினர் சிலர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த நிலையில், பாலமித்ரன் இப்போது இறந்திருப்பது சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications