குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்களே பாலியல் புகார் கூறுகிறார்கள்: பாடகர் திமிர் பேச்சு
மும்பை: குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்கள் தான் ஆண்கள் மீது பாலியல் புகார் தெரிவிப்பதாக பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் விமான பணிப்பெண் போதிசத்வா என்பவர் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி தற்போது பேசியுள்ளார் போதிசத்வா.

அபிஜித்
1998ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றபோது அபிஜித் என்னை தன்னுடன் வந்து டான்ஸ் ஆடுமாறு கேட்டார். நான் மறுக்கவே என் அருகில் வந்து என் கையை பிடித்து முறுக்கினார். கெட்ட வார்த்தை பேசிவிட்டு இரு உனக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறேன் என்றார். அவர் கிட்டத்தட்ட என் காதில் முத்தம் கொடுத்தார் என்று போதிசத்வா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பொய்
நான் என் வாழ்நாளில் பப்புக்கோ, டிஸ்கோத்தெக்கிற்கோ சென்றதே இல்லை. அந்த பெண் சொல்வது பொய். 1998ம் ஆண்டிலோ இல்லை எந்த ஆண்டிலுமே நான் அப்படி செய்யவில்லை. சொல்லப்போனால் நான் அப்பொழுது பிறக்கவே இல்லை என்று அபிஜித் தெரிவித்துள்ளார். 60 வயதாகும் அபிஜித் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிறக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

விளம்பரம்
என் பெயரை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள். என் பெயரை பயன்படுத்தி யாருக்காவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. யார் மீது நடவடிக்கை எடுப்பது என்று தெரியவில்லை. நான் ஏன் அந்த நபருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?. நீங்கள் தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், நான் அல்ல என்று அபிஜித் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார்
குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்கள் தான் ஆண்கள் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களை எல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. விளம்பரம் தேட அவர்கள் இப்படி சொல்கிறார்கள். அந்த பெண்கள் புகார் தெரிவிக்கும் சமயத்தில் நான் பிறக்கவே இல்லை என்று மீண்டும் நக்கலாக பேசியுள்ளார் அபிஜித். அபிஜித் மீது முன்னதாக பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











