நாயகன் மீண்டும் வரான்.. 35 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்!
சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார், இதில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹகத் பாசில்,காயத்ரி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

கமல்ஹாசனின் விக்ரம்
விக்ரம் திரைப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து அதிகளவு லாபத்தை ஈட்டியதால், பல திரைப்படங்களை தயாரிக்க முன் வந்துள்ளது. சிம்புவின் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். அதே போல, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

கமலின் 234வது படம்
இதையடுத்து, கல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னலுடன் உயதநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட் மூவீஸும், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

35 ஆண்டுகளுக்கு பின்
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு படத்தை வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 1987ம் ஆண்டு வெளியாக நாயகன் படத்திற்கு பின், கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன்
அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமாக பொன்னியின் செல்வன், அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 400கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இசைவெளியீட்டு விழா
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் இசைவெளியீட்டுவிழாவைப் போலவே இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இம்மாதம் 29ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவிலும் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











