உலவுச்சாறு பிரியாணி இசை வெளியீடு... இளையராஜாவுக்கு மலரபிஷேகம் செய்து கொண்டாடிய தெலுங்கு சினிமா!
ஹைதராபாத்: உலவுச்சாறு பிரியாணி தெலுங்குப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு மலர் அபிஷேகம் செய்து மரியாதை செய்தனர் தெலுங்கு திரையுலகினர்.
பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகும் படம் உன் சமையல் அறையில். அனைத்துப் பதிப்புகளுக்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் தெலுங்குப் பதிப்புக்கு உலவுச்சாறு பிரியாணி என தலைப்பிட்டுள்ளனர்.

கன்னடத்தில் ஏற்கெனவே இசை வெளியீடு நடத்தப்பட்டுவிட்டது. தெலுங்கில் நேற்று உகாதிப் பண்டிகையன்று உலவுச்சாறு பிரியாணி படத்தின் இசை வெளியீட்டை மிகப் பிரமாண்டமாகவும், பாரம்பரிய முறையிலும் நடத்தினார் பிரகாஷ் ராஜா.
இந்த இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினரே இளையராஜாதான்.
அவரை தெலுங்கு சினிமா உலகின் ஜாம்பவான்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தி மரியாதை செய்தனர். முன்னதாக இளையராஜா விழா அரங்குக்குள் நுழைந்ததுமே மந்திரங்கள் முழங்க மங்கல இசை ஒலிக்கப்பட்டது.
பின்னர் இளையராஜாவை பெரிய இருக்கையில் அமர வைத்து அவருக்கு மலரபிஷேகம் செய்தனர். இளம் பெண்கள் குச்சுப்புடி நடனம் ஆடி ராஜாவை வணங்கினர்.

தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்கள் எம்எம் கீரவாணி, மணிசர்மா ஆகியோர் இளையராஜாவுக்கு பொன்னாடைகள், மலர் மாலைகள் அணிவித்தும் வணங்கினர். பின்னர் தங்களுக்குப் பிடித்த இளையராஜா பாடல்களை மேடையில் பாடினர்.
சாதனை இயக்குநர்கள் ராகவேந்திரராவ், கோதண்ட ராமிரெட்டி, தயாரிப்பாளர்கள் டி ராமாநாயுடு, புஜ்ஜி, டாக்டர் வெங்கடேஸ்வரராவ், சி கல்யாண் உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டினர்.

இளையராஜா பேசுகையில், ""வெறும் இசை வெளியீட்டு விழா என்று சொல்லித்தான் தயாரிப்பாளரும் இயக்குநரும் என்னை அழைத்தனர். ஆனால் இங்கு வந்து பார்த்தால் எனக்கான விழாவாக மாற்றிவிட்டனர். இப்படியெல்லாம் செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா வராம இருந்திருப்பேனே," என்றார் சிரித்துக் கொண்டே!


Click it and Unblock the Notifications











