இளையராஜாவை வைத்து எழுதப்பட்ட கதைதான் உள்ளத்தை அள்ளித்தா... காஃபி வித் காதல் தொடர்பு தெரியுமா?
சென்னை: இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, பிரதாப் போத்தன் மற்றும் நடிகைகள் அமிர்தா, திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், சம்யுக்தா உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை சுந்தர்.சி ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.

காஃபி வித் காதல்
நடிகை குஷ்பூ தயாரிப்பில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் திரைப்படம் முழுக்க முழுக்க ஊட்டியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இதிலும் பல நட்சத்திர பட்டாளங்கள் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ளனர். அவருடைய வழக்கமான நகைச்சுவை ஜானர் என்று இல்லாமல் இந்த முறை ஃபீல் குட் மூவி ஜானரை முதன் முறையாக முயற்சித்திருக்கிறாராம்.

யுவன் கூட்டணி
வின்னர் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கி கொடுத்த யுவன் சங்கர் ராஜாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் சுந்தர்.சி. 90களில் தன்னுடைய படங்களுக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கும் போது அவர்கள் கம்போசிங் அறையில் யுவன் சங்கர் ராஜா சிறுவனாக உள்ளே வந்து கார்த்திக் ராஜாவின் இசை தகடுகள் எதையாவது எடுத்துக் கொண்டு பூனை போல் ஓடி விடுவாராம்.

இசை ராஜ்ஜியம்
இந்தப் படத்தை ஆரம்பிக்கும் பொழுது முதலில் எட்டு பாடல்கள் இருக்க வேண்டும் என்றுதான் சுந்தர்.சி ஆரம்பித்தாராம். ஆனால் தற்சமயம் நான்கு பாடல்கள்தான் இடம்பெற்றுள்ளன. அதிலும் ஒன்று மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரம்பம்பம் பாடலின் ரீமிக்ஸ். இசையமைத்தது மட்டுமல்லாமல் அந்தப் பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

உள்ளத்தை அள்ளித்தா
சுந்தர்.சி-க்கு முதன் முதலில் பெரிய கமர்சியல் ஹிட் படமாக அமைந்தது உள்ளத்தை அளித்தா திரைப்படம்தான். அந்தப் படத்தை துவங்கிய போது ஃபீல் குட் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக இளையராஜா இசை கச்சேரியில் வயலின் வாசிக்கும் ஒரு பெண்ணிற்கும் கோரஸ் பாடக்கூடிய ஒரு ஆணிற்கும் இடையே நடக்கக்கூடிய காதலை வைத்துதான் கதை எழுதி இருந்தாராம். ஆனால் படத்தில் ரம்பாதான் ஹீரோயின் என்று தயாரிப்பாளர் கூறியதால் ரம்பாவிற்கு அந்தக் கதாபாத்திரம் செட்டாகாது என்று கதையை மாற்றி எழுதி அதன் பின்னர் உருவானதுதான் உள்ளத்தை அள்ளித்தா படமாம். அதன் பின்னர் அதே போல் தொடங்கப்பட்ட தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்திலும் சந்தானம் கதாபாத்திரம் உள்ளே வந்தவுடன் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக மாறிவிட்டது. இந்த முறை கண்டிப்பாக ஃபீல் குட் மூவிதான் எடுக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை காஃபி வித் காதல் திரைப்படம் மூலம் நிறைவேற்றி இருக்கிறார் சுந்தர்.சி.


Click it and Unblock the Notifications











