பிரியங்கா சோப்ராவை நீக்குறதா.. அடபோங்க பாஸ்.. பாகிஸ்தானுக்கு பல்ப் கொடுத்த ஐநா!
சென்னை: பிரியங்கா சோப்ராவை யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐநா மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்குவதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

ஐநாவுக்கு கடிதம்
ஐநாவின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ரா இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் கடுப்பானது பாகிஸ்தான் அரசு. இதனை தொடர்ந்து ஐநா.வின் நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து பிரியங்கா சோப்ராவை நீக்கக்கோரி பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் யுனிசெப்பிற்கு கடிதம் எழுதினார்.

ஐநா அவை பதில்
இதனால் நிச்சயம் பிரியங்கா சோப்ரா மீது ஐநா நடவடிக்கை எடுக்கும் என காத்திருந்தது பாகிஸ்தான் அரசு. இந்நிலையில் பாகிஸ்தானின் கடித்தத்திற்கு ஐநா அவை பதிலளித்துள்ளது.

உரிமை உள்ளது
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், அளித்துள்ள பதிலில் யுனிசெப் நல்லெண்ண தூதர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் பேசுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அக்கறை உள்ள பிரச்சினைகளைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமை உள்ளது.

தனிப்பட்ட கருத்து
அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களோ அல்லது செயல்பாடுகளோ யுனிசெப்பின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

பல்பு வாங்கிய பாகிஸ்தான்
நம்ம ஊர் பாஷையில் பிரியங்கா சோப்ரா பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்ற ரீதியில் பதிலளித்திருக்கிறது ஐநா அவை. பிரியங்கா சோப்ராவை நீக்கக்கோரி பல்பு வாங்கியிருக்கிறது பாகிஸ்தான்.


Click it and Unblock the Notifications











