படங்களில் நடிக்க பிரதமரிடம் அனுமதி பெற்ற மத்திய அமைச்சர் நெப்போலியன்!

திமுக சார்பில் எம்பியான நடிகர் நெப்போலியன், மத்திய அமைச்சராகப் பதவி ஏற்றதும் நடிப்பதை விட்டுவிட்டார்.
அவர் அமைச்சராகப் பதவி ஏற்றபோது கைவசம் மூன்று படங்களை வைத்திருந்தார். அவற்றில் இரண்டு தமிழ்ப் படங்கள், ஒன்று தெலுங்குப் படம்.
பொன்னர் சங்கர், பள்ளிகொண்டபுரம் ஆகிய தமிழ்ப் படங்களில் பிரதமரிடம் அனுமதி பெற்று சில தினங்கள் நடித்துக் கொடுத்த நெப்போலியன், பின்னர் சலீம் படத்தில் நடிக்கவும் அனுமதி பெற்றாராம்.
இந்த தகவலை சென்னை கிண்டியில் உள்ள மத்திய ரசாயனத் துறை சார்பில் நடந்த பயிற்சி மைய அலுவலக திறப்பு விழாவில் நெப்போலியன் தெரிவித்தார்.
விழா மேடையில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பேசும்போது, நிறையபேர், நெப்போலியன் பாட்டை கேட்க ஆர்வமாக இருக்கின்றனர். எனவே அவர் பாட வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து நெப்போலியன் பேசுகையில், "நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
நான் மத்திய அமைச்சராக பதவி ஏற்றபோது பிரதமர் மன்மோகன்சிங் என்னிடம் இனிமேல் சினிமாவில் நடிக்க கூடாது என்று கூறிவிட்டார்.
அப்போது அவரிடம் நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட 3 படங்கள் முடிக்காமல் உள்ளன. அவற்றில் நடிக்காவிட்டால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார். அனுமதி வேண்டும் என்றேன். இந்த மூன்று படங்களில் மட்டும் நடிக்கலாம் என மன்மோகன் சிங் அனுமதி கொடுத்தார்," என்றார்.
பின்னர் அழகிரி விருப்பத்துக்கிணங்க, தான் நடித்த கிழக்கு சீமையிலே படத்திலிருந்து ஒரு பாடலை பாடினார்.


Click it and Unblock the Notifications











