Malaysia Vasudevan Son Yugendran - மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை: Malaysia Vasudevan Son Yugendran (மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன்) பிரபல பாடகர் மலேசிய வாசுதேவனின் மகனும், நடிகருமான யுகேந்திரன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா?.. வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்
தமிழ் சினிமா இசையில் மலேசியா வாசுதேவனின் பங்கு அளப்பரியது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என பல இசையமைப்பாளர்கள் இசையில் தனது தனித்துவ குரலால் இன்றுவரை தமிழ் மக்களின் ஆதர்சமாக விளங்கிக்கொண்டிருக்கிறார் அவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் வாசுதேவன் பிறந்தது,வளர்ந்தது எல்லாம் மலேசியாவில். இளையராஜாவின் இசையில் 16 வயதினிலே பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான மலேசியா வாசுதேவன் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். பாடல்கள் மட்டுமின்றி நடிகராகவும் ஜொலித்திருக்கிறார்.

மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன்: மலேசியா வாசுதேவனுக்கு யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் இருக்கின்றனர். யுகேந்திரன் பிரபலமான நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் தமிழ் சினிமாவில் இருந்தவர். இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம் ஜி அமரன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் எஸ்.பி சரண் உள்ளிட்டோருடன் நெருங்கி பழகுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக அறிமுகமான யுகேந்திரன்: ஒரு பாடகரின் மகனாக இருந்தாலும் நடிப்பின் மீது ஆர்வம் உடையவர் யுகேந்திரன். தனது சினிமா ஆசையை மலேசியா வாசுதேவனிடம் கூற தன்னால் எந்த ரெக்கமண்ட்டும் செய்ய முடியாது. நீயாக முயற்சி செய்து பெற்றுக்கொள் என கூறியிருக்கிறார். இதனையடுத்து தீவிரமாக முயன்ற யுகேந்திரனுக்கு சாவித்திரி என்ற சீரியலில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரை நாடகத்தில் அறிமுகப்படுத்தியது பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் அம்மா.
திரைப்படங்களில் நடித்த யுகேந்திரன்: சீரியலில் நடித்த யுகேந்திரனுக்கு அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்திய பிறகு ஏராளமான படங்கள் அவருக்கு கிடைத்தன. அப்படி அவர் விஜய்யுடன் யூத், பகவதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அஜித், விஜய் படங்கள் மட்டுமின்றி பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக விழா என்ற படத்தில் நடித்தார்.
பாடகராகவும் கலக்கிய யுகேந்திரன்: நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் கலக்கியிருக்கிறார் யுகேந்திரன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தேவனுடன் இணைந்து ஓ மரியா பாடல், கோவா படத்தில் சரணுடன் இணைந்து அடிடா நையாண்டிய உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
மேலும், அவர் சோலா பாடகராக பாண்டவர் பூமியில் இடம்பெற்ற ஏ சம்பா ஏ சம்பா, தோழா தோழா, ஆட்டோகிராஃபில் இடம்பெற்ற கிழக்கே பார்த்தென் விடியலாய் வந்தாய் அன்பு தோழி, பார்த்தேன் ரசித்தேனில் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் என ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
இப்போது என்ன செய்கிறார் யுகேந்திரன்?: யுகேந்திரன் ஒருகட்டத்துக்கு மேல் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார். அவருக்கு மாலினி என்ற மனைவி இருக்கிறார். அவர் பிஹெச்டி பட்டம் முடித்தவர். விஷாஷன், கிஷன், தர்ஷன் என்ற மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்தில் 2017ஆம் ஆண்டிலிருந்து வசித்துவரும் யுகேந்திரன் ரம்பூட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.

மீடியா ஒர்க்ஸ் மட்டுமில்லை; கான்செர்ட்டும்கூட: அந்த ரம்பூட்டான் மீடியா ஒர்க்ஸ் மூலமாக உலகம் முழுவதும் சென்று இசை கான்செர்ட்டுகளையும் நடத்திவருகிறார் யுகேந்திரன். சமீபத்தில்கூட ஆஸ்திரேலியாவில் இளையராஜா நடத்திய கான்செர்ட்டில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களை பாடினார். இதனையடுத்து தமிழ் புத்தாண்டையொட்டி மலேசியாவின் பங்சாரில் ஏப்ரல் 16ஆம் தேதி லைவ் பெர்பார்மன்ஸும் செய்யவிருக்கிறார் யுகேந்திரன்.
மாநாடில் மிஸ் ஆன யுகேந்திரன்: சென்னை 28 படத்தில் ஜெய்யை வெங்கட்பிரபுவிடம் அறிமுகப்படுத்தியது யுகேந்திரன். வெங்கட் பிரபுவும் யுகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவரது படங்களில் நடிப்பதற்கு பல முறை வாய்ப்பு கிடைத்தும் நிறைவேறாமல் போயிருக்கிறது. கடைசியாக வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில்கூட யுகேந்திரன் முக்கியமான ரோல் செய்ய வேண்டியதாம். ஆனால் ஏதோ காரணங்களால் அது நழுவிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











