நடிகை தீபிகாவை உயிருடன் எரிப்பவருக்கு ரூ. 1 கோடி பரிசு: உ.பி. அமைப்பு அறிவிப்பு
லக்னோ: நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்தால் ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு தெரிவித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் ராணி பத்மினியை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
போராட்டங்களினால் பத்மாவதி ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொடும்பாவி
அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடத்தியது. அப்போது தீபிகாவுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் தீபிகா, பன்சாலியின் கொடும்பாவிகளை எரித்தனர்.

மனு
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். பத்மாவதி படத்திற்கு தடை விதிக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பரிசு
மகாசபாவின் இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங் கூறியதாவது, உயிருடன் எரித்தால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா உணர வேண்டும். ராணி பத்மினி செய்த தியாகம் அவருக்கு ஒருபோதும் புரியாது. தீபிகாவை உயிருடன் எரிக்கும் நபருக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும். படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு எங்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்றார்.

பத்மினி
பத்மாவதி படம் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ராணியை அவமதித்து வரலாற்றை திரித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
முன்னதாக தீபிகாவின் தலையை வெட்டி எடுத்து வருபவருக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை போலீசார் தீபிகாவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சிறப்பு பாதுகாப்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











