பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும் எங்க படத்துக்கும் சம்பந்தம் இல்லை.. நடிகை உபாசனா ஓபன் டாக்!
சென்னை: டிராபிக் ராமசாமி, பிரம்மா.காம் படங்களில் நாயகியாக நடித்த நடிகை உபாசனா அடுத்ததாக கருத்துக்களை பதிவு செய் என்ற படத்தில் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள இந்த படம் குறித்து, அண்மையில் உபாசனா மனம் திறந்து பேசியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் பிரபலமாகும் முன்னதாகவே தங்களின் படம் பாதி ஷூட்டிங்கை முடித்து விட்டதாகவும், அதற்கு பிறகு தான் இரு கதைகளும் ஒரே பாதையில் பயணிப்பது தெரியவந்ததாகவும் ஆனால், இரண்டும் வேறு வேறு கதைக்களம் எனக் கூறியுள்ளார் உபாசனா.

பொள்ளாச்சி சம்பவம்
பொள்ளாச்சியில், இளம்பெண்களை ஆபாச படங்கள் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த வன்முறை கும்பல் குறித்த வீடியோ பதிவுகள் வெளியாகி நாட்டையே உலுக்கியது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆட்களை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உபாசனா
விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் உபாசனா ராய். மாடல் அழகியான உபாசனா, மிஸ் இந்தியா ஏசியா பட்டத்தை வென்றுள்ளார். 2013ம் ஆண்டு வெளியான கலர்ஸ் இன் பெங்களூரு படத்தில் முதன்முறையாக அறிமுகமான உபாசனா, தற்போது கருத்துக்களை பதிவு செய் படத்தில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கருத்துக்களை பதிவு செய்
சோஷியல் மீடியாவால் பெண்கள் எப்படி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்ற பிரச்சனையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் ஆர்யன் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமஹம்சா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக உபாசனா நடித்துள்ளார். அண்மையில் படம் குறித்து திருமாவளவன் பாராட்டியுள்ளார். நாளை படத்தின் டிரைலர் வெளியாகிறது.

அப்படி நடிச்சதுல ரொம்ப சந்தோஷம்
டிராபிக் ராமசாமி, பிரம்மா.காம் படங்களை தொடர்ந்து, கருத்துக்களை பதிவு செய் படத்தில் நடித்து வரும் நடிகை உபாசனா, தனது மூன்றாவது படத்திலேயே இப்படியொரு போல்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ரொம்ப சந்தோஷம் என்றும், தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதே தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

25 நாட்களில்
சோஷியல் மீடியா மூலம் ஏற்படும் நட்பால் எப்படி பாலியல் தொல்லைக்கு ஒரு பெண் ஆளாகிறார் என்றும், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதையம்சம். சென்னையில் இந்த படத்தை வெறும் 25 நாட்களில் இயக்குநர் ராகுல் பரமஹம்சா எடுத்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











