'எதுக்கும் எல்லை உண்டு' விக்கிபீடியாவில் அப்பா, அம்மாவை கூட மாற்றிவிட்டார்கள்.. நடிகை எச்சரிக்கை
மும்பை: விக்கிபீடியாவில் தனது அப்பா, அம்ம பெயரைக் கூட சிலர் மாற்றிவிட்டார்கள் என்றும் எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று பிரபல நடிகை கூறியுள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். இந்தியில் ரங்கீலா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்தி தவிர, தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

தேர்தலில் போட்டி
தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

தோல்வி அடைந்தார்
இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தோற்றதாகவும் அப்போது கூறியிருந்தார். பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

இன்ஸ்டா கணக்கு
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அந்தக் கட்சி, சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் அவர். சமீபத்தில் அவருடைய இன்ஸ்டா கணக்கை மர்மநபர்கள் சிலர் முடக்கினர். பின்னர் அது மீட்கப்பட்டது.

ஒரு எல்லை உண்டு
இந்நிலையில் தன் கணவர் மோஷின் அக்தர் மற்றும் அவர் குடும்பத்தினரை ட்ரோலர்கள் கடுமையாக தாக்கி வருவதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், என் கணவர் பயங்கரவாதி என்றும் பாகிஸ்தானியர் என்றும் அழைக்கப்பட்டார். எதற்கும் ஒரு எல்லை உண்டு.

ஶ்ரீகாந்த் மடோன்கர்
விக்கிபீடியாவில் கூட ஊடுருவி, எனது அம்மாவின் பெயரை ருஷனா அகமது என்றும் அப்பாவின் பெயரை ஷிவிந்தர் சிங் என்று மாற்றியுள்ளனர். அவர்கள் இந்தியாவில் எங்கோ வசிக்கக் கூடிய மனிதர்கள். ஆனால், அந்த ருஷனாவையும் ஷிவிந்தரையும் எனக்கு தெரியாது. என் தந்தையின் பெயர் ஶ்ரீகாந்த் மடோன்கர், அம்மா பெயர் சுனிதா.

காஷ்மீர் முஸ்லிம்
எல்லாவற்றுக்கும் மேலாக, என் கணவர் முஸ்லிம் மட்டுமல்ல, அவர் காஷ்மீர் முஸ்லிம். நாங்கள் இருவரும் அவரவர் மதங்களை சமமான வழியில் பின்பற்றுகிறோம். அவரையும் அவர் குடும்பத்தினரையும் ட்ரோலர்கள் தொடர்ந்து குறி வைத்து வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











