Urvashi: பிரபல நடிகர்களைப் பற்றி பேச தைரியம் இல்லை - மனம் திறந்த ஊர்வசி
கொச்சி: நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. தனது இயல்பான நடிப்பினால் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்று இவரைக் கூறலாம். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டும் தனது அனுபவத்தைக் கொண்டும் அட்டகாசமாக நடிப்பவர் இவர். இவர் முதன்மைக் கதாபாத்திரமான நடித்த ஜே. பேபி படத்தில் இவரது நடிப்பினை பலரும் பாராட்டினர். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகை ஊர்வசி 80களின் இறுதியில் இருந்து தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவரது நடிப்பிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக பாக்கியராஜ் படங்களில் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறும்பான வசனங்களை இவர் பேசும்போது ரசிக்காதவர்கள் இல்லை. அதேநேரத்தில் இவர் ஒரு சீரியஸான காட்சியில் நடிக்கும்போது ரசிகர்களை முழுக்க முழுக்க தன் வசப்படுத்திவிடும் நடிப்பினைக் கொண்டுள்ள நடிகையாக இன்றைக்கும் உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் அம்மாவாக சிறப்பாக நடித்திருந்தார். சூர்யாவுடன் போனில் பேசும் காட்சியில் அவர், “ விட்டுதாய்யா” எனக்கூறும்போது அழுகாதவர்கள் அல்லது நெகிழ்ந்து போகாதவர்கள் இல்லை. அதேபோல் ஜே.பேபி படத்தில் தனது இளைய மகன் தினேஷிடம் திட்டும் அடியும் வாங்கிவிட்டு, மீண்டும் அவரது வீட்டிற்கே சென்று, 'பசிக்குதுய்யா’ என கேட்கும் காட்சி பலரையும் உருகவைத்தது என்றே கூறலாம்.
ஊர்வசி: இந்நிலையில் இவர் மலையாள ஊடகம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக, “ நடிகையாக மாறிய பின்னர் எனது வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. குறிப்பாக நமக்காகவோ, நமது குடும்பத்தினருக்காகவோ கூட நம்மால் நேரம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. எனக்கு குழந்தைகள் பிறந்த பின்னர்தான் சினிமாவில் இருந்து ஓய்வு கிடைத்தது. ஆனால் குழந்தையை வளர்ப்பதிலேயே எனக்கு அந்த இடைவேளை சரியாக இருந்தது. எனது சகோதரிகளின் திருமணங்களுக்கு கூட நான் மிகவும் தாமதமாக எல்லாம் சென்றிருக்கின்றேன்.
அன்பு: நாம் சினிமாவில் நடிப்பதாலே, மக்கள் நம்மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் நாம் அவர்களை குறை சொல்ல முடியாது. ஆனால் நம்மால் நிம்மதியாக கோவிலுக்கு கூட சென்று வர முடியாது. இன்றைக்கு மக்களுக்கு பிரபலங்களாகவே இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடக்கூடாது, அல்லது அவர்களை தொல்லை செய்யக்கூடாது என்பதில், கவனமாகவே இருக்கின்றனர்.

பயம்: ஆனால் ஊடகங்களிடம் அப்படியான அணுகுமுறை இல்லை. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து கூற யாருக்குமே உரிமை இல்லை. நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதும் ஊடகங்கள் நடிகர்களின் குறிப்பாக மிகப்பெரிய நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதுவதில்லை. நடிகர்களைப் பற்றி எழுத பயப்படுகின்றார்கள்.
ஹேமா கமிட்டி: ஹேமா கமிட்டி தொடர்பாக அவர் பேசும்போது, ஆணும் பெண்ணும் இணைந்து பணியாற்றும் எல்லாத் துறைகளிலும் இந்தப் பிரச்னைகள் உள்ளன. சினிமா துறை என்பதால்தான் எல்லோருடைய கவனமும் இதில் குவிக்கின்றது. அதுதான் அதற்குக் காரணம். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மிகவும் தீவிரமானவை” எனப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











