Director Mahendran: என்றும் உதிரா பூ.. மகேந்திரனின் பிறந்த நாள் இன்று!
சென்னை: தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய வெகு சில இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவரான மகேந்திரனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரம்மாண்டங்களின் மூலம் தான் உலகத்தரத்தை எட்டமுடியும் என்று கோடி கோடியாய் பணத்தை கொட்டி படம் எடுத்து வரும் காலம் இது.
ஆனால், உலகத்தரம் என்பது பட்ஜெட்டில் அல்ல எதார்த்தமான படைப்பில் தான் உள்ளது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை ஊட்டியவர் இயக்குநர் மகேந்திரன்.

இயக்குநர் மகேந்திரன்: 1935ம் ஆண்டு ஜூலை 25ந் தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்தவர் மகேந்திரன். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். இவர் மகேந்திர பல்லவ மன்னன் கலைகளில் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து வியந்த அலெக்சாண்டர் பிற்காலத்தில் தனது பெயரை மகேந்திரன் என்று மாற்றிக் கொண்டார்.
முள்ளும் மலரும்: நாம் மூவர், சபாஷ் தம்பி, நிறைகுடம், கங்கா , திருடி உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி வந்த மகேந்திரன், 1978ம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜானி,நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
காட்சி மொழி கலைஞன்: சினிமாவில் யதார்த்தத்தை புகுத்தி, வசனங்களால் ஊற்றெடுத்த சினிமாவை காட்சி மொழிக்கு இழுத்து வந்த கலைஞன் மகேந்திரன். உணர்வுகளின் எண்ண ஓட்டத்தை திரையில் பிரதிபலித்த மகேந்திரன் படங்களுக்கு இசையமைத்து அவற்றிற்கு உயிர் கொடுத்தார் இளையராஜா. 2006ம் ஆண்டு வெளியான சாசனம் அவர் இயக்கிய கடைசிப்படம் ஆகும். மேலும் இயக்குநர் மகேந்திரன் தெறி, நிமிர், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
காலத்தை தாண்டிய கல்வெட்டு: உதிரிப்பூக்கள் என்ற உலக சினிமாவை கொடுத்த மகேந்திரன் 2019ம் ஆண்டு உலகவாழ்க்கையில் இருந்து உதிர்ந்த பூவானார். அவர் மறைந்தாலும் அவர் உருவாக்கிய திரைக்காவியங்கள் மக்கள் மனதில் இருந்து என்றென்றும் மறைவதில்லை. இவர் இயக்கியது என்னமோ 12 படங்கள் தான் என்றாலும் காலத்தை தாண்டிய கல்வெட்டுகளாக நிற்கின்றன அவரது படைப்புகள். இயக்குநர் மகேந்திரனின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











