17 வயதில் திருமணம்.. அம்மாவை இழந்தேன்.. பேபி அஞ்சு உருக்கமான பேட்டி!
சென்னை: மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி அஞ்சு. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், நான் குண்டாக இருந்ததால் எனக்கு படவாய்ப்பு வரவில்லை. மீனாவும் தானே குண்டா இருந்தாங்க, அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு வரும் போது, எனக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
நடிகை அஞ்சு கேளடி கண்மணி, அரங்கேற்ற வேளை, ஆதித்யன், கோபாலா கோபாலா, பூ மகள் ஊர்வலம், உனக்காக எல்லாம் உனக்காக, என்றென்றும் காதல்,வீராப்பு, பொல்லாதவன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், தன்னை விட 30 வயது மூத்த நடிகர் டைகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கருத்துவேறுபாடு ஏற்பட்டு தற்போது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

நடிகை அஞ்சு: பல ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாத அஞ்சு, யூடியூப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார். நான் சின்ன வயதில் நடிக்க வேண்டும் என நினைத்ததில்லை. ஆறிலிருந்து அறுபது வரை படத்தின் 100வது நாள் விழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அப்போது எனக்கு ஒன்றரை வயது. என்னை பார்த்து விட்டு இயக்குநர் மகேந்திரன் நடிக்க வைக்க வேண்டும் என கேட்டார். குழந்தை என்பதால் என்ன வந்ததோ அதையே ஷூட் செய்தார். உதிரிப்பூக்கள் தான் என்னுடைய முதல் படம்.
அம்மா இறந்தபின்: எனக்கு இவ்வளவு பணம் கொடுத்தால் தான் நடிப்பேன், அந்த கேரக்டர் கொடுத்தாத்தான் நடிப்பேன் என்று நான் சொன்னதே இல்லை. நடிகை என்றால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்று நினைப்பவள் நான், ஆனால் இன்னும் என்னை ஏன் ஒதுக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. வீராப்பு, பொல்லாதவன் படத்திற்கு பிறகு, ஒரு எட்டு வருடமாக நான் சினிமா பக்கம் வரவில்லை. ஏன் என்றால் என் அம்மா இறந்துவிட்டார்கள். இதனால், சினிமாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவில் என் அண்ணன் இருக்கிறார் அங்கு சென்றுவிட்டேன்.
17 வயதில் திருமணம்: எனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது, திருமணம் ஒரு விபத்து போலத்தான் நடந்தது, சினிமாவில் வாய்ப்பு குறைய ஆரம்பித்ததும் திருமணம் செய்து கொண்டேன். அந்த வாழ்க்கையும் சீக்கிரமாக முடிந்துவிட்டதால், மகனை வளர்க்க வேண்டும் என்ற தைரியம் என்னிடம் இருந்தது. அம்மா இருக்கும் வரைக்கும் மகனை அவர்கள் பார்த்துக்கொண்டார்கள் அவர்கள் இறந்த பிறகு தான், குடும்பமா சினிமாவா மகனா என்று யோசித்து, மகனுக்காக சினிமாவை விட்டு விலகினேன்.
குண்டாக இருந்தேன்: அதேநேரம் தமிழ் சினிமாவில் நான் குண்டாக இருந்ததால் வாய்ப்புகள் குறைந்து அம்மா, அக்கா கேரக்டருக்கு கேட்டாங்க, அதன் பின் மலையாளம் சென்றேன், அங்கே நடிப்பை மட்டும் தான் பார்த்ததால், பல படத்தில் நடித்தேன். குஷ்பூவும், மீனாவும் தானே குண்டா இருந்தாங்க, அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு வரும் போது, எனக்கு மட்டும் ஏன் என்று யோசித்து இருக்கிறேன். சினிமாவில் நன்றாக நடித்த தெரிந்தவர்கள் இல்லை என்று புலம்புகிறார்கள். ஆனால், நல்ல நடிகர்களை அவர்கள் அழைப்பது இல்லை. தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதற்கு பிறகு மீண்டும் என்னை திரையில் பார்க்கலாம் என்று நடிகை அஞ்சு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











