ஆஹா.. சப்பக் படத்தை பார்த்து அரசு அறிவித்த அட்டகாச அறிவிப்பு.. பாராட்டு மழையில் படக்குழு!
டேராடூன்: தீபிகா படுகோன் நடித்த சப்பக் படத்தை பார்த்து உத்தரகாண்ட் அரசு அட்டகாசமான அறிவிப்பை அறிவித்திருக்கிறது.
ஆசிட் வீச்சின் கொடூரம் குறித்து எடுத்துரைக்கும் படம் சப்பக். இந்த சப்பக் படத்தை ராசி, தல்வார் போன்று உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களை இயக்கிய மேக்னா குல்சார் இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
படத்தில் தீபிகா படுகோனே ,விக்ராந்த் மாசே ,மாதூர்ஜித் சார்கி, வைபவி உபத்யாயா மற்றும் பாயல் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். நடிகை தீபிகா படுகோன் ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஆக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆசிட் வீச்சு
ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு அம்மாபடம் எடுக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் மற்றும் மேக்னா ஆகிய இருவருடன் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

பாராட்டுகள்
உலகம் முழுக்க ரிலீஸாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

ஓய்வூதியம்
இந்நிலையில் படத்தை பார்த்து உத்தரகாண்ட் மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பென்ஷன் வழங்கப்படும்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 10 முதல் 11 பேர் வரை ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் லக்ஷ்மி அகர்வாலை அடிப்படையாக கொண்டு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ரூ. 5000 டூ 6000 வரை
அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் கவுரமாக வாழும் வகையில் மாதம்தோறும் 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை பென்ஷன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

உதவியாக இருக்கும்
இந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த அமைச்சரவையில் அனுமதி பெறப்படும் என்றும் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார். துணிச்சலான பெண்கள் அவர்களின் கனவுகளை நனவாக்க இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆண்கள் பாடம் கற்கனும்
மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ரேகா ஆர்யா, பெண்களை கவுரமாக நடத்த ஆண்கள் பாடம் கற்க வேண்டும் என்றும் அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











