வா வாத்தியார் படத்துக்கு வந்த பிரச்னை.. உதவிய சூர்யா.. எம்ஜிஆருக்கு பிறகு அவர்தான் என புகழாரம்
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் படம் பல பிரச்னைகளை கடந்த 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து நலனின் படம் ரிலீஸாவதால் பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கிறது. ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் விநியோகஸ்தர் ஒருவர் சூர்யா பற்றி பேசியது அவர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இரண்டு படங்களையும் வெவ்வேறு ஜானரில் எடுத்து கவனம் ஈர்த்தார். அவ்விரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதிலும் காதலும் கடந்து போகும் படம் மாதிரி ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை இனிமேல் பார்க்க முடியாது என்பது ரசிகர்களின் கருத்து. படத்தின் க்ளிப்பிங்குகளை அடிக்கடி முகநூலிலும் அவர்கள் பகிர்வது வழக்கம்.
கார்த்தியுடன் கூட்டணி: இந்த இரண்டு படங்களுமே நலனுக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர் சூர்யா தம்பி கார்த்தியுடன் வா வாத்தியார் படத்தில் முதன்முறையாக கூட்டணி அமைத்தார். சில வருடங்களுக்கு முன்பே படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது. இதில் கார்த்தி மட்டுமின்றி ராஜ் கிரண், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்துக்கு பிரச்னை: படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டாலும் ரிலீஸாகாமல் இருந்தது. அதற்கு ஞானவேலுக்கு இருந்த கடனே காரணம் என்று கூறப்பட்டது. முக்கியமாக சூர்யாவை வைத்து அவர் தயாரித்த கங்குவா கடுமையான அடியை வாங்கியது. இதனால் அவருக்கு எக்கச்சக்க கடன் சேர்ந்துவிட்டது. அதெல்லாம் சேர்ந்து அவரை மீண்டும் எழ விடாமல் முடக்கியதாகவும்; வா வாத்தியாருக்கு அதுதான் பெரிய பிரச்னை என்றும் சொல்லப்பட்டது.
டிசம்பர் 12ல் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க ஒருவழியாக அனைத்து பிரச்னைகளும் முடிந்து டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்துடைய ட்ரெய்லரும் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றது. பட ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
விநியோகஸ்தர் பேச்சு: அந்த விழாவில் பேசிய பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன், "தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரொம்பவே நெருக்கடியில் இருந்தார். அப்போது சூர்யா அவரை அழைத்து அந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே முடிவு காணும்படி உதவி ஒன்றை செய்தார். ஞானவேல் ராஜா அதை கேட்டு ரொம்பவே எமோஷனலாகிவிட்டார். வன்மம் நிறைந்த இந்த உலகத்தில் சூர்யா போல் ஒரு ஹீரோ கிடையாது. எம்ஜிஅருக்கு பிறகு சூர்யாதான் மற்றவர்கள் மேல் அக்கறை காட்டுகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











