Vaa Vaathiyaar day 5 Box Office - வா வாத்தியார் 5வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸில் ஏற்ற இறக்கமா போகுதே பாஸ்
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் திரைப்படம் பல தடைகளை கடந்து கடந்த 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. நலனும், கார்த்தியும் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனத்தையே சந்தித்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கு மெய்யழகன், ஜப்பான் ஆகிய இரண்டு படங்களுமே வணிக ரீதியாக நிம்மதியை கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருந்த வா வாத்தியார் படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாவுக்கு சில சிக்கல்கள் எழுந்ததன் காரணமாக நீண்ட காலமாக படம் ரிலீஸாகாமல் முடங்கி கிடந்தது. ஒருகட்டத்தில் இனி வா வாத்தியார் அவ்வளவுதானோ என்ற கேள்வி எழும் நிலையும் உருவானது.
ரிலீஸான படம்: ஆனால் யாரும் நினைக்காத ட்விஸ்ட்டாக இந்தப் பொங்கலுக்கு ஜனவரி 14ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே இதே மாதிரி பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு பின்வாங்கியது தொடர்ந்து நடந்ததால்; இந்த அறிவிப்பையும் ரசிகர்கள் முழுக்க முழுக்க நம்பவில்லை. ஒருவழியாக ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது படம். ரசிகர்களும், நலன் - கார்த்தி கூட்டணியின் வேலையை ரசிக்க தியேட்டர்களுக்கு சென்றார்கள்.

பெருத்த ஏமாற்றம்: ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் பெரிய அளவில் ஏமாற்றமடைந்துவிட்டார்கள். வித்தியாசமாக படத்தை எடுக்கிறேன் என்கிற பெயரில் பழைய காலத்து கதையை அரைகுறையான திரைக்கதையோடு இப்படி எடுத்துவிட்டாரே நலன் என ரசிகர்கள் வேதனைப்பட்டார்கள். அதேசமயம் தாமதமான ரிலீஸ்தான் இந்த திருப்தியின்மைக்கு காரணம். சில வருடங்களுக்கு முன்பே ரிலீஸாகியிருந்தால் படம் சூப்பராக கனெக்ட் ஆகியிருக்கும் என நலனின் ரசிகர்கள் கூறவும் தவறவில்லை.
போதும் கார்த்தி: அனைத்துக்கும் மேலாக படத்தில் கார்த்தியின் நடிப்பு அனைவரையும் ரொம்பவே சோதித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எம்ஜிஆர் மேனரிஸங்களோடு அவர் படம் முழுக்க நடித்த விதம் கொஞ்ச் நேரம்தான் ரசிக்கும்படி இருந்தது. இரண்டாவது பாதியெல்லாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என கழுவி கழுவி ஊற்றினார்கள் ரசிகர்கள். இப்படி பலத்த சேதாரத்தை கண்டிருக்கும் வா வாத்தியார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
வசூல் நிலவரம்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி படம் வெளியாகி ஐந்தாவது நாளான நேற்று இந்தியாவில் வெறும் 46 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூல் செய்திருக்கிறதாம். நான்காவது நாளில் 1.45 கோடி ரூபாய் வசூலித்த படம் ஒரெ நாளில் இவ்வளவு சரிவை சந்தித்து கம்மியாக வசூலித்திருக்கிறது. மொத்தம் இப்படம் ஐந்து நாட்களில் 7.46 கோடி ரூபாய் இந்தியாவில் வசூலித்திருப்பதாக சாக்நில்க் தளம் கூறுகிறது. தலைவர் தம்பி தலைமையில் படத்துக்கு மக்கள் கூட்டம் படையெடுக்க தொடங்கிவிட்டதால்தான் வா வாத்தியாருக்கு இந்த பரிதாப நிலைமை என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











