Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை
ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்...
"ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;
அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?
மாமனிதனின் மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது உன் -
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று...
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது
அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது
காடையர்க்கு கிலியானது!
'தம்பி!
தம்பி!" என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ் வாழ் -
இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன் கும்பி!
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை...
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்டவெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
தப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!
'இருக்கிறானா?
இல்லையா?"
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு -
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!
அம்மா! இந்த
அவல நிலையில் - நீ...
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி -
வந்தாய் சென்னை; அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!
இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித்தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம்தராத - எங்கள்
தமிழ்மண் -
நிரந்தரமாய்த்
தேடிக்கொண்டது பழி!
(பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது)