முதலில் வுண்டர்பார், இப்போ வட சென்னை 2: அது ஏன் தனுஷுக்கு மட்டும் இப்படி நடக்குது?
சென்னை:வட சென்னை 2 படம் குறித்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வட சென்னை படம் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகம் வரும் என்று அறிவித்தார்கள்.

வட சென்னை பார்ட் 2 படப்பிடிப்பு 20 சதவீதம் முடிந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பெரிய திரையில் தங்களின் வாழ்க்கையை காட்டிய விதம் வட சென்னை மக்களுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் முதல் பாகத்தை எடுத்த இடங்களில் ஷூட்டிங் நடத்த முடியாமல் வெற்றிமாறன் கஷ்டப்படுவதாகவும் கூறப்பட்டது.
மேலும் வட சென்னை படத்தில் நடித்த சிலர் தற்போது வேறு படங்களில் பிசியாக இருப்பதாலும் இந்த படம் கைவிடப்பட்டது என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் இது குறித்து தனுஷ் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
ட்விட்டரில் தனுஷ் கூறியிருப்பதாவது,
என் ரசிகர்கள் மத்தியில் இந்த குழப்பம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. வட சென்னை பார்ட் 2 வருகிறது. நான் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும்வரை என் படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் தயவு செய்து நம்ப வேண்டாம். நன்றி, லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து வட சென்னை 2 படத்தின் ஷூட்டிங் துவங்குமாம்.
முன்னதாக தனுஷின் தயாரிப்பு நிறுவனமான் வுண்டர்பார் பிலிம்ஸ் நஷ்டத்தில் போவதாகவும், அதனால் அதை மூடப் போகிறார்கள் என்றும் தகவல் வெளியானது. இதை பார்த்த தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடவில்லை. அது நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று விளக்கம் அளித்தார். மேலும் மீண்டும் ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்கும் ஐடியா இருப்பதாகவும் அவர் கூறினார்.
அது ஏன் தனுஷ் பற்றியே அடிக்கடி வதந்தி கிளம்புகிறது?.


Click it and Unblock the Notifications











