சுந்தர்.சி நடிப்பில் உருவாகிறது தலைநகரம் 2.. நாய்சேகர் இல்லாமலா..? கொரோனா முடிந்ததும் ஷூட்டிங்!
சென்னை: சூப்பர் ஹிட்டான தலைநகரம் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. இதில் வடிவேலுவும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுந்தர்.சி, ஜோதிர்மயி, பிரகாஷ் ராஜ் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம், தலைநகரம். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
இதில் நாய் சேகர் என்ற கேரக்டரில் வடிவேலு காமெடியில் கலக்கி இருப்பார். அந்த காமெடி இப்போது வரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் பாகம்
இந்தப் படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்குகிறார். இவர், சுந்தர்.சி நடிப்பில், இருட்டு என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்போது இயக்குனர் அமீர் நடிக்கும் நாற்காலி படத்தை இயக்கி வருகிறார். லாக்டவுனால் இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

கொரோனா தீவிரம்
அடுத்து, சுந்தர்.சி நடிக்கும் இருட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்தான் கொரோனா தீவிரமடைந்தது. ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஷூட்டிங் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஊரடங்கிற்கு முன்பே ஏற்கனவே சுந்தர்.சிக்காக வேறு ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தார் வி.இசட்.துரை.

மூன்று மாதங்களாக
சுந்தர்.சி நடித்து ஹிட்டான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக அதை உருவாக்கி இருந்தார். அந்தப் படத்திற்காக சுந்தர்.சி இரண்டு மாதங்களுக்கு மேல் தாடி வளர்க்க வேண்டும் என்பதால் அந்த திட்டத்தைத் தள்ளி வைத்திருந்தார். ஆனால் தற்போது நிலவும் சூழலால், சுந்தர்.சி கடந்த மூன்று மாதங்களாக தாடி வளர்த்து வருகிறார். எதேச்சையாக இப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததால், ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தலைநகரம்-2 பாகத்தை தொடங்க உள்ளனர்.
Recommended Video

நாய் சேகர் வடிவேலு
தலைநகரம் முதல் பாகத்தில் வடிவேலுவின் நாய் சேகர் காமெடி பெரிய ஹைலைட். அதனால் இந்த இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் முடிவாகவில்லை. லாக்டவுன் முடிந்ததும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











