இப்ப உள்ள காமெடியை பார்த்து கண்ணை கெடுத்துக்காதீங்க: வடிவேலு கோரிக்கை
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போதுள்ள காமெடி நடிகர்களை விளாசித் தள்ளியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் வடிவேலு. பிரச்சாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான ஒருவரை காய்ச்சு, காய்ச்சு என்று காய்ச்சி எடுத்தார். தேர்தல் முடிந்த பிறகு வடிவேலுவுக்கு பிரச்சனைகள் வந்தன.
இதையடுத்து அவர் 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் தற்போதுள்ள காமெடி பற்றி கூறுகையில்,

நான் இல்லாத காலத்தில்
நான் சினிமாவில் இல்லாத காலகட்டத்தில் ஏராளமான காமெடி நடிகர்கள் வந்துவிட்டனர் என்றார் வடிவேலு. (அவர் இல்லாத கேப்பில் அசுர வேகத்தில் வளர்ந்தவர் சந்தானம் தான்)

சிரிப்பு வரவில்லை
நல்ல காமெடியை யார் செய்தாலும் அதை பார்த்து சிரிப்பு வந்தால் சிரிக்கலாம். ஓரிரு படங்களை பார்த்தேன். ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை என்று வடிவேலு தெரிவித்தார்.

காமெடி மறந்துவிடுமோ
நான் முழுப்படத்தையும் பார்த்தால் எங்கே எனக்கு காமெடியே மறந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். காமெடி என்ற பெயரில் கெட்ட விஷயங்களை காட்டுகிறார்கள் என்றார் வடிவேலு.

டென்ஷன்
தற்போதுள்ள காமெடி காட்சிகளில் கெட்ட விஷயங்களை காட்டுவதால் அவற்றை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. அந்த காட்சிகளை பார்த்தால் மன அழுத்தம் தான் வருகிறது. அதனால் இது போன்ற காமெடி காட்சிகளை பார்த்து மனதையும், கண்ணையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று வடிவேலு கூறினார்.


Click it and Unblock the Notifications











