Vadivelu on Bhavatharini death: தெய்வக்குழந்தை.. தைப்பூசத்துல பவதாரிணி மறைவு.. கதறிய வடிவேலு!
சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவு செய்தி அறிந்து கதறி அழுதுவிட்டேன் என நடிகர் வடிவேலு ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி நேற்று உயிரிழந்தார். 47 வயதில் பவதாரிணி திடீரென கேன்சர் காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வடிவேலு பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமா மட்டுமின்றி பல மொழிகளில் தந்தையை போலவே சிறந்து விளங்கி வந்தவர். புற்றுநோய் பாதிப்புக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே ரொம்பவே வேதனையால் தவித்து வந்தவர் நேற்று காலமானார்.

வடிவேலு இரங்கல்: மாரிசன் படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்து விட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு எங்க குடும்பத்தார்கள் எல்லோருமே ஒன்னும் புரியல என்ன ஆச்சு 47 வயசு பொண்ணு இவ்வளவு சீக்கிரமா கடவுள் கிட்ட போயிடுச்சே என கதறி அழுதுவிட்டேன் என வடிவேலு ஆடியோவில் கூறியுள்ளார்.

தைப்பூச நாளில்: பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல அது ஒரு தெய்வக் குழந்தை அந்த குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் பூராவுமே இன்னைக்கு ரொம்ப நொறுங்கி இருப்பாங்க.. தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதுக்கு மேல என்னால பேச முடியல என பவதாரிணியின் மறைவு செய்தி அறிந்து நடிகர் வடிவேலு மனமுடைந்து அழுதபடி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த ஆடியோ பேட்டி ரசிகர்களை உருக செய்துள்ளது.


Click it and Unblock the Notifications