விஜயகாந்த் மறைவுக்கு ஏன் போகல.. மனம் திறந்த வடிவேலு.. மனதார சொன்ன விஷயம் இதுதான்!
சென்னை: நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்குள் ஒரு இனம் புரியாத ஆனந்தம் தொற்றிக் கொள்ளும். அதேபோல், அவரது கட்சித் தொண்டர்கள் பலரும் அவரது மறைவுக்குப் பின்னரும் அவர் மீது உள்ள விசுவாசத்தால் அந்த கட்சியில் நீடிப்பவர்களாக இருக்கிறார்கள். கேப்டனின் மறைவின் போது பலருக்கும் இருந்த கேள்வி, கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த, வடிவேலு வருவாரா என்பதுதான். ஆனால் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வடிவேலு செல்லவில்லை. இந்நிலையில் அவர் ஏன் செல்லவில்லை என்பது குறித்து அவரே மனம் திறந்து நடிகர் குரு லஷ்மனன் இடம் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். இவருக்கு தமிழ்நாடு அரசு அரசு மரியாதை அளித்து நல்லடக்கம் செய்தது. பிரதமர், முதலமைச்சர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேப்டன் மறைந்து மறுதினம் அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ் நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர். இது அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கேப்டன் மறைந்து மறுதினம் தான் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் மரணம்: திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இப்படி இருக்கையில் அப்போது பலராலும் எழுப்பப்பட்ட கேள்வி வடிவேலு அஞ்சலி செலுத்த வந்தாரா என்பதுதான். ஆனால் வடிவேலு வரவில்லை. வடிவேலு வந்திருந்தாலும் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது என்ற பேச்சுக்களும் அப்போது அடிபட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கேப்டன் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வடிவேலு பிரச்சாரம் செய்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

வடிவேலு வருத்தம்: இந்நிலையில் மாரீசன் படத்தில் வடிவேலு உடன் இளம் நடிகர் குரு லஷ்மண் இணைந்து நடித்த போது, கேப்டன் குறித்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது, உடனே வடிவேலு " மனுஷன் இறந்ததற்கு கூட என்னால போக முடியல என்று வருத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து பேசிய வடிவேலு, " நான் போயிருப்பேன், நான் போயிருந்தாலும் எல்லோரும் என்னை தவறாகத்தான் பேசுவார்கள். நான் போகவில்லை என்றாலும் திட்டத்தான் போகிறார்கள். என் மனதார சொல்லுகிறேன், அந்த மனுஷன் கட்டாயம் சொர்க்கத்தில் தான் இருப்பார் என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











