நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை... யாருக்கும் பிரச்சாரம் செய்யமாட்டேன்!- வடிவேலு
மதுரை: நான் தற்போது எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறுகையில், "நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு ஆதரவு கோரி, மதுரை நாடக நடிகர் சங்கத்தினரைச் சந்தித்தேன். அவர்களது குறைகளை பாண்டவர் அணியால் தான் தீர்க்க முடியும்.

பாண்டவர் அணியே வெற்றி பெறும் என்பதால், தற்போது எதிர்தரப்பினர் (சரத்குமார்) தோல்வி பயத்தில் சமரசத்துக்கு அழைக்கின்றனர். அவர்களது அழைப்பில் உள்நோக்கமும், சூழ்ச்சியும் உள்ளதால் அதற்கு பலிகடாவாகமாட்டோம்.
நடிகர்கள் பிறந்த மாநிலத்தை சுட்டிக்காட்டி நடிகை ராதிகா பேசுவது சரியல்ல. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் எனக்கு ஏற்பட்ட பிரச்னையின் போது நடிகர் சரத்குமார் உதவவில்லை.
நடிகர் சங்கப் பிரச்னைகளை அறிந்த பிறகே பாண்டவர் அணிக்கு நடிகர் கமலஹாசன் ஆதரவளிக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நடிகர் சங்கப் பிரச்னை நன்கு தெரியும். அதனால் தான் அதிமுக சார்ந்த நடிகர், நடிகைகள் நடுநிலை வகிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கு (திமுகவுக்கு) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். ஆனால் தற்போது நான் எந்தக்கட்சியிலும் உறுப்பினராகக் கூட இல்லை. ஆகவே எதிர்வரும் தேர்தல்களில் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன். எனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாதது குறித்து ராதிகா விமர்சிப்பது சரியல்ல, அவருக்கு தேவையில்லாத வேலை அது," என்றார்.


Click it and Unblock the Notifications











