Vadivelu - மாரி செல்வராஜை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய வடிவேலு.. ஒரு எமோஷனல் கதை
சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) இயக்குநர் மாரி செல்வராஜ் தற்கொலைக்கு வடிவேலுவின் காமெடி காப்பாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். அதுமட்டுமின்றி எழுத்தாளராகவும் ஜொலித்தவர். அவர் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

எப்படி இருக்கு படம்?: உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜின் இயக்கம் என்பதாலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குக்கு சென்றனர். எதிர்பார்த்தபடியே படம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றும்; வழக்கம்போல் மாரி செல்வராஜ் இந்தப் படத்திலும் சமத்துவத்தை பேசியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.
வடிவேலு, ஃபகத்: குறிப்பாக படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மிக அருமையாக வந்திருக்கிறது. இனி தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை மாரி வடிவமைத்திருக்கிறார். நிச்சயம் வடிவேலு ஒரு பிறவி கலைஞன். அதுமட்டுமின்றி இயக்குநர் பட ரிலீஸுக்கு முன்னர் சொன்னது போலவே இதில் வழக்கமான வடிவேலு இல்லை என்றும் சிலாகித்துவருகின்றனர். அதேபோல் ஃபகத் பாசிலின் நடிப்பும் மிரட்டலாக அமைந்திருக்கிறது.
சக்சஸ் மீட்: படம் வெளியாகி 10 நாட்களை கடந்திருக்கும் சூழலில் இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சக்சஸ் மீட்டில் வெளிப்படையாகவே தெரிவித்தார். இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இதற்கிடையே இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பரிசாக அளித்தது. இந்தச் சூழலில் சமீபத்தில் நடந்த சக்சஸ் மீட்டில் மாரி செல்வராஜ் பேசியது ட்ரெண்டாகியுள்ளது.

மாரி செல்வராஜ் பேச்சு: அந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ், "நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார், மேலும் வாழ்க்கையில் பல முறை தற்கொலை செய்துகொள்ள நினைத்திருக்கிறேன். ஒருமுறை அதேபோல் தற்கொலைக்கு முயன்றதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வடிவேலுவின் காமெடி ஒன்றை பார்த்தேன். உடனே அந்த முடிவை மாற்றிக்கொண்டேன்" என்றார்.
உதயநிதியின் சேட்டை: முன்னதாக மாமன்னன் சக்சஸ் மீட்டில் பலரும் பேசினார்கள். ஆனால் இயக்குநர் மாரி செல்வராஜோ ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசினார். அப்போது திடீரென உதயநிதி ஸ்டாலின் தனது இருக்கையிலிருந்து எழுந்து சென்று மாரி செல்வராஜை கட்டி அணைத்து பேசியது போதும் என கூறி அழைத்து வந்தார். அவரது இந்த செயல் அங்கிருந்தவர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











