Vadivelu: வடிவேலுவை கட்டித்தூக்கி வரச் சொன்ன பிரபலம்... நேரில் பார்த்ததும் சைடு வாங்கிய சங்கீதம்!
சென்னை: சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெற்றது.
அப்போது மேடையேறிய வடிவேலு மாமன்னன் படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தனக்கே உரிய பாணியில் பேசினார்.

வடிவேலுவுக்கு சைடு வாங்கிய சங்கீதம்: ரசிகர்களால் வைகைப்புயல் என கொண்டாடப்படும் வடிவேலு தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். சில வருடங்களாகவே நடிக்காமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த வடிவேலு மாமன்னன் படத்தில் வெறித்தனமாக கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் அதிகம் எதிரபர்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் வரும் 29ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த 1ம் தேதி மாமன்னன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இவ்விழாவில் இன்னும் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் மாமன்னன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் பாடல் பாடி அசத்தினார். அதேபோல் ராசா கண்ணு பாடலை பாடுவதற்காக வைகைப்புயல் வடிவேலுவும் மேடையேறினார். அப்போது இசைப்புயலும் வைகைப்புயலும் மேடையில் செய்த அட்ராசிட்டி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. முதலில் சங்கமம் படத்தில் எம்.எஸ்.வி பாடிய 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கம்' பாடலின் இருவரிகளை பாடினார் வடிவேலு.
அதன்பின்னர் ராசா கண்ணு பாடலை பாடிய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். "ராசா கண்ணு பாடலை நான் தான் பாட வேண்டும் என ஏஆர் ரஹ்மான் மாரி செல்வராஜ்ஜிடம் கூறியுள்ளார். உடனே எனக்கு கால் பண்ண மாரி செல்வராஜ், ராசா கண்ணு பாடலை பாட வாங்கண்ணேன்னு கூப்பிட்டார். அப்போது நான் பாடினால் நல்லா இருக்குமா என மாரி செல்வராஜ்ஜிடம் கேட்டேன். அதற்கு நீங்க வரவில்லை என்றால் உங்களை கட்டித் தூக்கிட்டு வாங்கன்னு ஏஆர் ரஹ்மான் சார் சொல்றார்" எனக் கூறினார்.
"உடனே மறுநாளே ஏஆர் ரஹ்மான் ஸ்டூடியோ சென்றுவிட்டேன். அங்கேபோய் ஏஆர் ரஹ்மானை பார்த்ததும் சங்கீதம் சைடு வாங்குது" என தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக கூறியுள்ளார் வடிவேலு. அதன்பிறகு ஏஆர் ரஹ்மான் சொல்லிக்கொடுத்தது போன்றே பாடியதாகவும், ரெக்கார்டிங் முடிந்து பாடலை கேட்டால் அது எனக்கே ரொம்ப வித்தியாசமாக இருந்தது எனவும் வடிவேலு கூறியுள்ளார். ஏஆர் ரஹ்மான் குறித்து வடிவேலு பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











