Vadivelu - அச்சு அசல் வைகைப்புயல்தான்.. வடிவேலுவின் மகனை பாருங்க.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: நடிகர் வடிவேலு மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர். சில பிரச்னைகளால் சினிமாவில் ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அவர் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் தனது குடும்பத்தினரை பொதுவெளியில் கேமராவுக்கு முன்பு அவ்வளவு அதிகமாக காண்பித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவரது மகன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு.

தனி பாணி: தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வனவாசம் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாமன்னன் மாபெரும் வெற்றி பெற்றது.அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடிக்கிறார். அதனை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
வடிவேலுவின் குடும்பம்: வடிவேலு எவ்வளவுதான் பிரபலம் அடைந்து பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தினரை கேமராவின் கண்களிலிருந்து பெரும்பாலும் காப்பாற்றி வைத்திருப்பவர். அதனாலேயே அவரது மனைவி, மகன் மற்றும் மகள் பற்றிய தகவல்கள் அதிகம் யாருக்கும் தெரியாது. தன்னுடைய மகனின் திருமணத்தைக்கூட மதுரையில் ரொம்பவே சிம்ப்பிளாக முடித்தார். திரையுலக பிரபலங்கள்கூட பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை. அந்த அளவுக்கு குடும்பத்துக்கு பிரைவேசியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
ட்ரெண்டாகும் மகன் புகைப்படம்: வடிவேலு சரோஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மகள்களும் சுப்ரமணி என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மகன் சுப்ரமணியின் புகைப்படம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவரது திருமணத்தில் வடிவேலுவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே வடிவேலு மாதிரியே இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











