வடிவேலு என்கிற பெயரே அவமானமாக போய்விட்டது.. என்ன செய்வது?..மனம் திறந்த வைகை புயல்
சென்னை: வடிவேலு நடிப்பில் கடைசியாக கேங்கர்ஸ் திரைப்படம் வெளியானது. சுந்தர். சி இயக்கியிருக்கும் அந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கியமாக இப்படத்தின் மூலம் வடிவேலு தரமான கம்பேக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.அடுத்ததாக மாரீசன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி படத்தில் சிறிய ரோலில் முதலில் நடித்தார் வடிவேலு. அதற்கு பிறகு சொந்த ஊரான மதுரைக்கே சென்ற அவருக்கு ராஜ்கிரணின் அறிமுகம் கிடைத்தது.அதனை பயன்படுத்தி என் ராசாவின் மனசிலே படத்தில் முழுநேர நடிகராக அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே தனது வெள்ளந்தியான நடிப்பு, வித்தியாசமான உடல் மொழியால் தனி முத்திரை பதித்தார். பிறகு கவுண்டமணி, செந்தில் காமெடிகளில் நடித்தார் வடிவேலு. ஒருகட்டத்தில் கவுண்டமணிக்கும், செந்திலுக்கும் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து வடிவேலுவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
வலிக்கு மருந்து கொடுக்கும் வடிவேலு: வடிவேலு தனது காமெடியில் பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு காமெடி செய்தார். அது தமிழ்நாடு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்ற நிலைமை உருவானது. ரஜினியேகூட சந்திரமுகி படத்தில் வடிவேலு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. அதேபோல் வடிவேலு விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என பலருடன் நடித்து அதகளம் செய்திருக்கிறார்.

வடிவேலுவை சுற்றி எழுந்த பஞ்சாயத்துகள்: ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தார். ஆனால் அதற்கடுத்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க அவருக்கும் விஜயகாந்த்துக்கும் முட்டிக்கொண்டது. எனவே அவரை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் தேமுதிக - அதிமுக கூட்டணியை 2011ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் விமர்சனம் செய்தார். இதனையடுத்து வடிவேலுவுக்கு பிரச்னைகள் ஆரம்பித்தன.
வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ்: அதன்படி வடிவேலுவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைந்து ஒருகட்டத்தில் வாய்ப்பே இல்லாமல் போனது. மேலும் அவருக்கு ரெட் கார்டும் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக அவருக்கான பிரச்னைகள் எல்லாம் முடிந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார் அவர். அதனையடுத்து அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் அவருக்கு சிறந்த பெயரை பெற்று தந்தது. கடைசியாக சுந்தர். சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்திருந்தார். நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு - சுந்தர்.சி கூட்டணி இணைந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள்.
வடிவேலுவின் கம்பேக்: படத்தை பார்த்த ரசிகர்கள் கேங்கர்ஸ் நல்ல விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். முக்கியமாக இத்தனை வருடங்கள் கழித்து வடிவேலு ஒரு தரமான கம்பேக்கை கொடுத்திருக்கிறார். இந்தக் கூட்டணி மீண்டும் ஹிட்டடித்திருக்கிறது; தொடர்ந்து வடிவேலுவும், சுந்தரும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் வடிவேலு அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
வடிவேலு பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு அம்மா என்னிடம் இப்படி சொன்னார். அதாவது, 'சிறையிலிருந்து வந்த ஒருவர் இன்னொருவரிடம் பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் தர முடியாது என்று கூறியிருக்கிறார். உடனே இந்த நபரோ பணம் கொடுக்காத நபரை பார்த்து, 'எனக்கா பணம் இல்லை என்று சொல்கிறாய். இன்று மாலை 5 மணிக்கு உன்னை நான் கொலை செய்வேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த சமயம் பணம் இல்லை என்று சொன்னவரின் தாய் வந்து என்ன விஷயம் என்று கேட்க; நடந்ததை இவர் சொல்லியிருக்கிறார். உடனே அந்த அம்மாவோ அட அவன் கிடக்குறான் வடிவேலு நீ வா என்று அழைத்து போனாராம். உடனே குத்துவேன் என்று சொன்னவரோ, ஹே யார பார்த்து வடிவேலுனு சொல்றனு சத்தம் போட்டிருக்கிறார். இப்படி சிலருக்கு வடிவேலு என்று சொன்னால் பிடிக்காது. என்னுடைய பெயரை அவமானமாக பார்க்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











